தக்காளி விலை தாறு மாறு... சட்னி, சாம்பாருக்கு தக்காளி எப்படி வாங்குவது?- இல்லத்தரசிகள் கவலை
சென்னையில் கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னை: மழையால் தக்காளி செடிகள் அழுகத் தொடங்கியுள்ளன. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளி விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த மாதம் ஒரு கிலோ 5, ரூபாய்க்கு கூவி கூவி விற்கப்பட்ட தக்காளி மளமளவென விலை உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ நவீன் தக்காளி ரூ 45 க்கும் நாட்டு தக்காளி ரூ 38 க்கும் விற்பனை செய்யப்பபட்டது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

தக்காளி வரத்து குறைவு
சென்னையின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ராயகோட்டை, கர்நாடகா , மற்றும் ஆந்திராவிலிருந்து உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து தக்காளி வரும் . வழக்கமாக சென்னையின் தக்காளி தேவையை பூர்த்திசெய்ய நாளொன்றுக்கு 1000டன் அளவு வரத்து வந்து கொண்டிருந்த நிலையில். கோடைக்கால விளைச்சல் குறைந்த நிலையில் தக்காளி வரத்து குறைந்து 500 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் தக்காளி விலை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.80க்கும், சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தக்காளி விலை உயர்ந்து வருவதால் சட்னி, சாம்பாருக்கு எப்படி வாங்குவது என்று இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

மதுரையில் தக்காளி விலை
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் முதல் தர தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையும், இதற்கு அடுத்த ரகம் கிலோவுக்கு ரூ.85 வரையும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக தக்காளிகள் செடியிலேயே அழுகி விடுகின்றன. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைவு உள்ளது. ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளிக்கும் தட்டுப்பாடு உள்ளது. 15 கிலோ எடை கொண்ட ஆந்திரா தக்காளி ஒரு பெட்டி ரூ.900 வரை விற்பனையாகிறது. சிறு, சிறு கடைகளில், சிறிய மார்க்கெட்டுகளில் தக்காளியின் சில்லரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மழையால் வரத்து குறைவு
மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், இந்த வாரத்தில் தக்காளியின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தக்காளி தவிர மற்ற காய்கறிகளின் விலை சீராகவே இருக்கிறது. விரைவில் தக்காளி வரத்து அதிகரித்துவிடும். அதன்பின்னர் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications