சீன விவகாரம்.. தேசியவாத குரலை குறைங்க.. சரிவராது.. தேவெ கெளடா அதிரடி பேச்சு!
சென்னை: தேசியவாதம் என்ற பெயரில் எழக்கூடிய குரலின் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும், சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷம் சரியல்ல என்று முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி. தேவ கவுடா தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களை, சீன ராணுவம் தாக்குதல் நடத்தி கொன்ற சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுக்கு ராணுவ ரீதியாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் வலுத்து வருகின்றன.
சுகோய், மிராஜ்.. தயார் நிலையில் அதிநவீன போர் விமானங்கள்.. காஷ்மீரில் விமானப் படை தளபதி திடீர் ஆய்வு
அதிக கோஷம்
ஆனால், இந்த விஷயத்தில் முன்னாள் பிரதமரான தேவேகவுடா வேறு மாதிரியான கருத்துக்கள் வைத்துள்ளார். நேற்றைய தினம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தேவகவுடா, வெளியிட்ட இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இது பற்றி அவர் கூறியுள்ளதாவது: எல்லையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு தேசியவாதம் என்பது உயர்ந்த குரலில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
தேசியவாத ஒலி குறைப்பு
நாம் யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படவேண்டும். தேசியவாதம் எனும் குரல் ஒலி குறைத்துக் கொள்ளப் படவேண்டும். சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷம் எழுவது சரியானது கிடையாது. நடைமுறையில் இதை செயல்படுத்துவதற்கு மிக மிக அதிக முயற்சிகள் தேவைப்படும். யதார்த்த நிலை என்ன என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டியது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம்.
பழிக்குப் பழி பேச்சு வேண்டாம்
பிரச்சனைகளை நமது வார்த்தைகள் அதிகப்படுத்தி விடக்கூடாது. பழிக்குப் பழி, தூண்டுதல் போன்றவற்றுக்கான காலமிது கிடையாது. சில மீடியாக்கள் எல்லை பிரச்சினை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. சமூக வலைத்தளங்கள் மிகமோசமாக, தப்பும், தவறுமாக தகவல்களை பரப்பி மக்களை குழப்பி வருகின்றன.
சுய கட்டுப்பாடு
நான் பிரதமராக இருந்தபோது 1996ஆம் ஆண்டு சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி எல்லையில் ராணுவ வீரர்கள் மோதிக் கொள்ளக் கூடாது. சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். மோதல்நிலை ஏற்பட்டால், உடனடியாக பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மதித்து செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்களில் கட்டுப்பாடு
சமூக வலைத்தளங்களில், பொதுமக்களிடையே சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். பிஎஸ்என்எல் மற்றும் ரயில்வே சீன நிறுவனத்துடன் பல்வேறு ஒப்பந்தங்களில் இருந்து மெல்ல வெளியே வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், ஹெச்.டி.தேவகவுடா இவ்வாறு ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், உள்நாட்டு அரசியலையும், பாதுகாப்பு விவகாரங்களையும் எதிர்க் கட்சிகள் ஒன்றாக கருத கூடாது. நான் இவ்வாறு கூறுவதன் அர்த்தம், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கேள்வி கேட்கக் கூடாது என்பது கிடையாது. ஆனால், முக்கியமான விஷயம் எது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தங்கள் விமர்சனங்களை வைக்கலாம் தவறு கிடையாது, என்று தெரிவித்தார்.