வெளுக்க போகுது கனமழை! இன்று 16 மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்கு.. மக்களே குடையை மறக்க வேண்டாம்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் தான் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது.
இந்தச் சூழலில் வரும் நாட்களில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

வானிலை மையம்
இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

16 மாவட்டங்களில் கனமழை
இதன் காரணமாக, இன்று (நவ.6) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை வானிலை எப்படி
நாளை (நவ.7) மற்று நாளை மறுநாள் (நவ.8) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நவ.9ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்கள்
வரும் நவ. 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, கடலூர், இராமநாதபுரம் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
வரும் நவ. 9ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல நவ.10இல் 10.11.2022: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.












Click it and Unblock the Notifications