டி.ஆர்.பாலு மனைவி ரேணுகாதேவி மறைவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். ரேணுகாதேவியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி (80). இவர், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.

ரேணுகாதேவியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜாவின் தாயுமான ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு அவர்கள். அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.
அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications