கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை இரண்டாம் மொழியாக சேர்க்க வேண்டும்.. திருச்சி சிவா கடிதம்
சென்னை: நடப்பு கல்வியாண்டு முதல் (2021-22) தமிழ்நாட்டில், கேந்திரிய வித்யாலயா (கே.வி) மற்றும் மாநிலத்தின் பிற சிபிஎஸ்இ பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழை இரண்டாம் மொழியாக சேர்க்குமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் அவர் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளதையும் அதில் குறிப்பிட்டுள்ளார் திருச்சி சிவா.
ஏற்கனவே மத்திய அமைச்சரை நேரில் சந்தித்தும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

தமிழ் ஆசிரியர்கள் தேவை
"49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை, இது உள்ளூர் மாணவர்கள் தங்கள் தாய்மொழியை தங்கள் மாநிலத்தில் ஒரு பாடமாகப் படிப்பதை தடுக்கிறது. மறுபுறம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சமஸ்கிருத தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 7 ஆம் வகுப்புக்கு பாஸ் செய்யப்படுவார். " என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.

கூட்டாட்சி
தமிழ் ஒரு மூத்த மொழி, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்பிக்காதது அரசியலமைப்பு ரீதியாக கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில் தீவிர கவலைக்குரிய விஷயம்.

சிபிஎஸ்இ
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் மொழிக்கு பதிலாக அப்ளைடு கணிதம் போன்ற விருப்ப தொழில்நுட்ப பாடங்களைத் தேர்வு செய்ய சிபிஎஸ்இ அனுமதிப்பது தாய்மொழியைக் கற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதைத் தவிர்ப்பது மீண்டும் மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது.

இந்த வருடமே சேர்க்க வேண்டும்
தமிழக மக்களை திருப்திப்படுத்துவதற்கும், கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்யவும் நடப்பு கல்வியாண்டில் கே.வி மற்றும் பிற சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக சேர்க்க வேண்டும். இவ்வாறு தனது கடிதத்தில் திருச்சி சிவா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications