நோயின் வீரியம் ஒரு புறம்.. நிர்வாக அலட்சியத்தால் ஒரு புறம்.. பறிபோகும் உயிர்கள்.. டிடிவி தினகரன்
சென்னை: நோயின் வீரியத்தால் உயிர்களை இழந்து வரும் நிலையில் நிர்வாக அலட்சியங்களாலும் உயிர்கள் இழப்பதை ஏற்க முடியாது என திருப்பூரில் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்தது குறித்து டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது.
அப்போது ஆக்ஜிஜன் கிடைக்காமல் இரு நோயாளிகள் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

உயிரிழப்பு
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவர் மின்தடையால் ஆக்சிஜன் செலுத்த முடியாமல் உயிரிழந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது.

குடும்பம்
ஏற்கனவே நோயின் வீரியத்தால் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில்,நிர்வாக அலட்சியத்தால் இப்படி அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது. இதற்குக் காரணமானவர்கள் மீது @CMOTamilNadu
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்.

டிடிவி தினகரன்
தமிழகத்தில் இனி இத்தகைய சம்பவம் நிகழாமல் தடுக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அனுப்பிட வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவமனை
இன்று காலை வரை இரு நோயாளிகளும் நன்றாக இருந்ததாக கூறப்படும் நிலையில் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வேறு வார்டுக்கு மாற்றியுள்ளார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் கூட இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications