எடப்பாடியுடன் இணைந்து பயணிக்க ரெடி.. ஒரே ஒரு கண்டிஷன்.. டிடிவி தினகரன் பகிரங்க அழைப்பு
சென்னை : எடப்பாடி பழனிச்சாமி தனது தவறுகளை உணர்ந்து திருந்தி வந்தால் அவருடன் இணைந்து பயணிப்பேன் எனவும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டுமென பாஜக தலைமை விரும்பும் நிலையில், தனக்கான முக்கியவத்துவம் குறைந்து விடுமென்பதாக எடப்பாடி பழனிசாமி முற்றாக மறுத்து வருகிறார்.
அதே நேரத்தில் அரசியல் கிளைமேட் மாறியுள்ள நிலையில், பாஜக தரப்புடன் இணக்கம் காட்டி வரும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் மீண்டும் அதிமுக கட்சிக்குள்ளும் செல்வாக்கு பெறலாம் என அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன்
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது தவறுகளை உணர்ந்து திருந்தி வந்தால் அவருடன் இணைந்து பயணிப்பேன் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்," பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தமிழகத்தில் பெரிய கட்சி அதன் தலைமையில் தான் கூட்டணி என்று கூறியிருக்கிறாரே தவிர எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி எனக் கூறவில்லை. அண்ணாமலைக் கூறிய அன்றும் இன்றும் அதிமுக செயல்படாத நிலையில் தான் இருக்கிறது. அண்ணாமலையின் கருத்தை விட பாரத பிரதமரின் கருத்தை நீங்கள் எடுப்பீர்களா?

மெகா கூட்டணி
இன்றைக்கு அதிமுக இருக்கிற நிலைமையை எடப்பாடி பழனிச்சாமியை உணரவில்லை என்பதுதான் உண்மை. எடப்பாடி பழனிச்சாமி மெகா கூட்டணி அமைப்பது குறித்து நான் கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நீங்கள் எந்த கூட்டணிக்கு செல்வீர்களா என என்னிடம் கேட்டபோது அம்மாவின் உண்மை தொண்டர்கள் மத்தியில் இருக்கும் காங்கிரசுடனோ அல்லது பாஜக உடனோ கூட்டணிக்கு சொல்ல வேண்டும் என நக்கல் நையாண்டியுடன் தான் நான் சொன்னேன். மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என சொல்பவர்கள் மற்றவர்களை கேவலமாக பேசுபவர்கள் அவர்களெல்லாம் உணர வேண்டும்.

துரோகத்தின் உச்சி
கூட்டணி அமைத்ததால் திமுகவை வெற்றி பெற முடியும். இல்லையென்றால் 2021 தேர்தலில் வெற்றி பெற்றதை போல அடுத்தும் திமுக தான் வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி தனது தவறுகளை உணர்ந்து திருந்தி வந்தால் அவருடன் இணைந்து செய்லபடுவேன் அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சினையும் இல்லை. அவர்தான் துரோகத்தின் உச்சியில் போய் நிற்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக தலைமை அலுவலகம் தங்களிடம் இருக்கிறது என ஜெயக்குமார் செங்கோட்டையன் போன்றவர்கள் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

இரட்டை இலை
ஆனால் இரட்டை இலை தான் சின்னம். அதுதான் கட்சித் தலைமை.ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் அடையாளமாக இருப்பது இரட்டை இலை தான். அதிமுகவில் இருந்தாலும் எங்களிடம் பேசுபவர்கள் கட்சியையும் சின்னத்தையும் விட்டு வர முடியாது என்று தான் பேசுவார்கள். சின்னத்தை வைத்து தான் எடப்பாடி ஆட்டம் போடுகிறார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து செங்கோட்டையன் கட்சியில் இருப்பவர் தான். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் செங்கோட்டையன் முதற்கொண்டு பலரும் எடப்பாடி பழனிச்சாமி உடன் இருப்பார்களா என்பது தெரியாது. பழனிச்சாமி கையில் ஆட்சியும் கிடையாது சின்னமும் கிடையாது.

அண்ணா திமுக
கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவிக்கப்பட்ட போது என்னிடம் வந்து எனது பெயரை முதலில் அறிவித்து விடாதீர்கள். எல்லோரிடமும் கையெழுத்து வாங்கிவிட்டு அதன் பிறகு எனது பெயரை சொல்லுங்கள் பலரும் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார். ஜெயக்குமார் உள்ளிட்ட யாரும் எடப்பாடி உடன் இருக்க மாட்டார்கள். ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு என்னையும் எனது சித்தி சசிகலாவையும் எப்படியெல்லாம் புகழ்ந்து பேசினார்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் அனைவருக்கும் இரட்டை இலை இருக்கும் இடம் தான் அண்ணா திமுக அங்கு தான் தலைமை" என்றார்.












Click it and Unblock the Notifications