வீடு பற்றி எரியும்போது கூட்டணி பற்றி பேசுகிறார் எடப்பாடி - டிடிவி தினகரன் அட்டாக்!
சென்னை: "வீடு பத்திக்கிட்டு எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்டமாதிரி இந்த நேரத்தில் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ருசி கண்ட பூனையைப் போல எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டுமென்று பதவி வெறியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி." என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரூரில் நடந்தது விபத்துதான். தவெக நிர்வாகிகளுக்கு போதிய அனுபவம் இல்லை. அவர்கள் வேண்டுமென்றே எதையும் செய்திருக்க வாய்ப்பில்லை. எந்த தலைவரும் சொந்தக் கட்சித் தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்து சரிதான். முதல்வர் யதார்த்தத்தை கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று இருந்தால், நீதிமன்றம் கூட இவ்வளவு கண்டனம் தெரிவித்திருக்காது.

உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட கரூர் விவகாரத்தை நிதானமான கையாள்கிறார். ருசி கண்ட பூனையைப் போல எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டுமென்று பதவி வெறியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுவது போல தவெகவுக்காக வக்கீல் போல் வாதாடி வருகிறார் பழனிசாமி.
வீடு பத்திக்கிட்டு எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்டமாதிரி இந்த நேரத்தில் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். விஜய் கூட்டணி பற்றி பேசும் மனநிலையில் இருப்பாரா? விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைப்பது தவறு கிடையாது. ஆனால் பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும் என தலைகீழாக நின்றாலும் அவரை வீழ்த்தாமல் அமமுக ஓயாது.
தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் தொண்டர்கள் அவரது ஓநாய் வேடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். துரோகத்துக்கு பெயர் பெற்றவர் அவர். கரூர் சம்பவத்துக்கு ஆளுங்கட்சிதான் காரணம் என எடப்பாடி பேசுவது தரம் தாழ்ந்த அரசியல். எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடிக்கு குழு அனுப்பாத பாஜக, கரூருக்கு மட்டும் அனுப்பியது ஏன்?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது பழனிசாமி உடனே செல்லவில்லை. பயந்து கொண்டு ரொம்ப நாள்களுக்கு பிறகு சென்றார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் உடனே கரூருக்கு சென்று விட்டார். இதை வைத்து அரசியல் பேசும் தலைவர்களை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கூட்டணிக்காக பழனிசாமி ஊர் ஊராக சென்று பேசுவதை தரம் தாழ்ந்த அரசியலாக நான் பார்க்கிறேன்.
முதல்வருக்கு யாரையும் கைது செய்து விட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது தெரிகிறது. 41 உயிர்கள் அநியாயமாக போயுள்ளது. இதில், எப்ஐஆர் போட வேண்டிய அவசியமும், கைது செய்ய வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளது. இதனால், நான் அரசுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம்.
கரூர் சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்றால் பழி நம் மேல் வந்துவிடும் என விஜய் நினைக்கிறார் போல. இந்த கொடிய துயரத்தை அரசியலாக்காமல், அனைத்து கட்சிகளும் காவல் துறையினரும் கவனமாக இருக்க வேண்டும். விஜய் அரசியலுக்கு புதியவர், கரூர் சம்பவம் பிழையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய்யின் வீடியோவை பார்க்கும்போது, சற்று வருத்தமாகத்தான் இருந்தது. அவர் இந்தச் சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று இருக்க வேண்டும்.
கரூர் சம்பவத்தில் முதல்வரின் நடவடிக்கை மிக நிதானமாக இருந்தது. அது அவரின் நீண்ட அரசியல் அனுபவத்தை காட்டுகிறது. முதல்வரின் பேச்சில் ஒரு பொறுப்புணர்வு தான் தெரிகிறது. யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. கொடிய குற்றத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றால் என்ன நியாயம்? கரூர் சம்பவத்தில் அண்ணாமலையின் பேச்சும் கூட எனக்கு வருத்தமளிக்கிறது.
கரூர் துயர் சம்பவத்தில் முதல்வர் பெருந்தன்மையுடன் தான் நடந்து கொண்டார். நான் இந்த ஆட்சிக்கு ஆதரவாக பேசவில்லை. முதல்வருக்கு யாரையும் கைது செய்ய வேண்டும் என எண்ணம் இல்லை. இது போன்ற மரணங்கள் இனிமேல் நடக்க கூடாது. கரூரில் இந்த துயர் சம்பவம் நடந்ததால், முன்னாள் அமைச்சரை குறை சொல்கிறார்கள். 2006 ஆம் ஆண்டு முதல் செந்தில் பாலாஜி எனக்கு பழக்கம். அவர் எனது நல்ல நண்பர். அவர் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசியல் ரீதியாக எதையும் செய்வார். ஆனால் செந்தில் பாலாஜிக்கு இதுபோன்ற கொடூர புத்தி இல்லை. இதுவே நாமக்கல்லில் நடந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும்? " என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications