உயிரை பணயம் வைத்து சேவை செய்த அரசு மருத்துவர்களை இப்படி போராட வைக்கலாமா? - டிடிவி தினகரன் கேள்வி!
சென்னை: கொரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்த அரசு மருத்துவர்களை இப்படி ஊதிய உயர்வுக்காகவும் நியாயமான கோரிக்கைக்காகவும் போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடனடியாக அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொன்முடியின் “ஓசி” பஸ் பேச்சு.. மூத்த அமைச்சர் இப்படி பேசலாமா? முதலமைச்சர் எச்சரித்தாரே - டிடிவி
அரசு மருத்துவர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சிக்கு வந்தால் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவோம் என்று வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இதுவரை மருத்துவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் இருப்பது பற்றி அரசு மருத்துவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மருத்துவர்களின் கோரிக்கை
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசாணை354-ஐ மறுஆய்வு செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நேரத்தை நீடிக்கும் விதமாக உள்ள அரசாணை எண் 225-ஐ ரத்து செய்ய வேண்டும், மருத்துவர்களின் சேமநல நிதி திட்டத்தில் சேர்ந்துள்ள பயனாளிகளுக்கு சேமநல நிதி உடனடியாக வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தங்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அரசு மருத்துவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதி வழங்குங்கள்
இந்நிலையில், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அரசு மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நீதி வழங்கவும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி அரசாணை 354-ன் கீழ் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை (Pay Scale) 4-ஐ வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னையில் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உயிரைப் பணயம் வைத்து
கொரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்த அரசு மருத்துவர்களை இப்படி ஊதிய உயர்வுக்காகவும் நியாயமான கோரிக்கைக்காகவும் போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? உடனடியாக அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.