டிஜிட்டல் ஊடகங்களுக்கு பொறுப்பு தேவை.. ஊடக விவாதங்களால் பாதிப்பு.. தலைமை நீதிபதி ரமணா பேச்சு!
சென்னை: தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்களில் நாட்டின் ஜனநாயகத்தை பின்னோக்கி இழுத்து செல்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற தேசிய பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை பேசியுள்ளார். அவர், நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட பரப்புரைகள் செய்யப்படுகின்றன. எந்த விவகாரத்திலும் நீதிபதிகள் உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். இதனை பலவீனம் என்று யாரும் தவறாக வேண்டாம்.
நீதிபதிகளின் பாதுகாப்பு
அண்மைக் காலமாக நீதிபதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற பொதுப் பிரதிநிதிகள் ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் பணியின் காரணமாக அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் நீதிபதிகளுக்கு அப்படி இல்லை.
சமூக ஊடகம்
புதிய ஊடகக் கருவிகள் கற்பனைக்கு எட்டாத மாபெரும் திறனைக் கொண்டுள்ளன. ஆனால் சரி - எது, நல்லது - கெட்டது, உண்மை - போலி எது என்பதை வேறுபடுத்திப் பார்க்க இயலாது. அதனால் ஊடக விசாரணைகள் எந்தவொரு வழக்குகளை தீர்ப்பதிலும் வழிகாட்டும் காரணியாக இருக்க முடியாது.
விவாதங்கள்
ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். சில சமயங்களில் சில வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நீதிபதிகளே முடிவெடுப்பதில் சிரமங்களை சந்திப்பர். இதுமட்டுமல்ல, முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தொடர்பான விவாதங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்து வருவது நிரூபணமாகி வருகிறது.
பொறுப்பு தேவை
அதோடு ஊடகங்களால் பரப்பப்படும் சில கருத்துகள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் விதமாக அமைகிறது.ஊடகங்கள் தங்கள் பொறுப்பை தட்டிக் கழிப்பதன் மூலம், ஜனநாயகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பத்திரிகைகள் இன்னும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுகின்றன. டிஜிட்டல் மீடியா தங்களின் பொறுப்புகளை காற்றில் பறக்க விட்டுவிடுகின்றன. சமூக ஊடகங்கள் பற்றி சொல்ல தேவையே இல்லை. அது இன்னும் மோசமாக செயல்படுகிறது.
டிஜிட்டல் ஊடகம்
ஊடகங்கள் தங்கள் வார்த்தைகளை சிறப்பாகவும், சில கட்டுப்பாடுகளுடனும் பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். டிஜிட்டல் ஊடகங்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்தி மக்களுக்கு கல்வி கற்பிக்கவும், உற்சாகப்படுத்தவும் வேண்டும்.
மேலும், நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாததும், உள்கட்டமைப்பை மேம்படுத்தாததும் தான் நாட்டில் அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு முக்கியக் காரணம் என்று என்வி ரமணா தெரிவித்தார்.