முகம் சுளிக்க வைத்த விஜய் நண்பா, நண்பீஸ்! மதுரை சித்திரை திருவிழாவிலும் TVK கோஷம்! கடுப்பான மக்கள்
சென்னை: மதுரை என்றாலே கொண்டாட்டம்தான்! வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் கோடிக்கணக்கான மக்களின் உணர்வோடு கலந்த ஒரு புனித நிகழ்வு. பல நூற்றாண்டுகளாக அமைதியுடனும், பக்தியுடனும் நடந்து வரும் இந்தச் சித்திரை திருவிழாவில், இதுவரை கண்டிராத ஒரு 'சத்தம்' இப்போது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

அது வேறொன்றுமில்லை... "தவெக... தவெக..." என்ற முழக்கம்தான்!
புனித நதியில் அரசியல் கோஷமா?
சித்திரை திருவிழாவைக் காண தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் மதுரைக்கு வருவார்கள். இந்த ஆண்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது, பக்தி முழக்கத்திற்குப் பதிலாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொண்டர்கள் ஆங்காங்கே குழுவாகத் திரண்டு "தவெக... தவெக..." என்று அரசியல் கோஷங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையின் பாரம்பரிய திருவிழாவை அரசியல் களமாக மாற்ற முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? எனப் பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். "நாங்கள் சாமி கும்பிட வருகிறோம், உங்கள் அரசியல் பலத்தைக் காட்ட இதுவா இடம்?" என்று கொதிக்கின்றனர் மதுரை மக்கள்.
கொடைக்கானலிலும் தொடர்ந்த கலாட்டா
மதுரைக்கு முன்னதாக, மலைகளின் இளவரசியான கொடைக்கானலிலும் இதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியது. விடுமுறையைக் கழிக்க அமைதியைத் தேடி வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில், தவெக தொண்டர்கள் ஒன்று கூடி கோஷமிட்டதும், வாகனங்களை வழிமறித்துச் செய்த ஆரவாரமும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் இடையூறாக அமைந்தது. ரசிகர்களின் இந்த கோஷம் இப்போது ஒரு சமூகத் தொல்லையாக (Public Nuisance) மாறி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
அஜித்தின் முதிர்ச்சி... விஜய்யின் மௌனம்!
ரசிகர்களின் கொண்டாட்டம் எப்போது எல்லையைத் தாண்டுகிறதோ, அப்போது தலைவன் தலையிட வேண்டும். அதற்குச் சிறந்த உதாரணமாக நடிகர் அஜித்குமாரைச் சுட்டிக்காட்டுகின்றனர் நடுநிலையாளர்கள்.
முன்பு அஜித் ரசிகர்கள் அவரை "கடவுளே அஜித்தே" என்று அழைத்து போஸ்டர் அடிப்பதும், கூச்சலிடுவதுமாக இருந்தனர். ஆனால், "என்னைத் தலைவன் என்றோ, கடவுள் என்றோ அழைக்க வேண்டாம்; நான் ஒரு சாதாரண நடிகன் மட்டுமே" என்று அறிக்கை விட்டுத் தன் ரசிகர்களைக் கட்டுப்படுத்தினார் அஜித். வேண்டுமென்றால் என்னை ஏகே என்று அழையுங்கள் என்று அஜித் கூறி இருந்தார். அந்த ஒரு முதிர்ச்சியான செயல், ரசிகர்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வந்தது.
இத்தனை வருசமா அழகா,அமைதியா நடந்துகிட்டு இருந்த திருவிழாவ நாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங தவெக நாய்ங்க....... pic.twitter.com/CTEtKrEG87
— King Hippo (Dhurandhar) (@kingH_offl) May 1, 2026
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி.
"அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றிய விஜய், அவர்களுக்கு நாகரிகத்தையும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத பண்பையும் கற்றுக்கொடுக்க வேண்டாமா?" எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கட்டுப்படுமா கழகம்?
ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் அதற்குத் தொண்டர்களின் உற்சாகம் அவசியம். ஆனால், அந்த உற்சாகம் பொதுமக்களின் உணர்வுகளையும், பாரம்பரியத்தையும் புண்படுத்தக் கூடாது. மதுரையின் மாண்பையும், கொடைக்கானலின் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தொண்டர்களுக்கு விஜய் எப்போது 'கடிவாளம்' போடுவார்?
தவெக தொண்டர்கள் செய்யும் இந்த "கூச்சல் அரசியல்" அக்கட்சிக்கு ஆதரவைத் தருமா அல்லது பொதுமக்களின் வெறுப்பைச் சம்பாதிக்குமா? என்பதை விஜய் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. தலைமை மௌனம் காக்கும் வரை, இந்த தொல்லைகள் தொடரவே செய்யும் போலிருக்கிறது!












Click it and Unblock the Notifications