பாஜக எடுத்த சர்வே.. விஜய்யின் பலத்தால் ஆச்சரியமடைந்த டெல்லி.. பேச்சுவார்த்தைக்கு இதுதான் காரணமா?
சென்னை: தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இருக்கும் ஆதரவு குறித்து பாஜக தரப்பில் கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு, அதனை அமித்ஷா கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய்க்கு இருக்கும் மக்கள் ஆதரவு காரணமாகவே, டெல்லியில் தவெகவின் சில நிர்வாகிகளால் காய் நகர்த்த முடிந்ததாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரியாக திமுகவையும், கொள்கை எதிரியாக பாஜகவையும் விஜய் அறிவித்தார். ஆனாலும் கடந்த ஜூன் மாதம் வரை விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தீவிரமாக முயன்று வந்தது. நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உட்பட பலரும் நேரடியாகவே விஜய்யை அழைத்தனர்.

ஆனால் விஜய் கடைசி வரை பிடி கொடுக்கவில்லை. இதன்பின் தவெகவையும் பாஜகவினர் அட்டாக் செய்ய தொடங்கினர். ஏனென்றால் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பதால், விஜய்க்கான ஆதரவு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் நடுநிலை வாக்காளர்களை விஜய் கவரத் தொடங்கியது அனைத்து கட்சிகளுக்கும் தெரிய வந்தது.
இந்த நிலையில் கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் தவெகவுக்கு சிக்கல் எழுந்த நிலையில், டெல்லியின் உதவியை நாட சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் முயன்றனர். அதன்பின் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு கமாண்டோ பாதுகாப்புடன் தனி விமானத்தில் பயணித்தார்.
இதனால் தவெகவை தங்களின் கட்டுப்பாட்டில் பாஜக கொண்டு வர முயன்றதாக கூறப்பட்டது. அதற்கு தமிழ்நாட்டில் பாஜக எடுத்த கருத்துக்கணிப்பே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் விஜய்க்கு சுமார் 15 சதவிகிதம் வரை மக்களின் ஆதரவு இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.
இதனை தேர்தல் ஆலோசகர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் அமித்ஷாவும் ஆச்சரியமடைந்து, கூட்டணிக்குள் கொண்டு வர முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கரூர் விவகாரத்தில் தமிழக பாஜக விஜய்க்கு நேரடியாக ஆதரவாக இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் டெல்லிக்கு தவெக தலைமை கொஞ்சம் கூட பிடி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
ஏனென்றால் டெல்லி பாஜகவின் மனதை அப்பட்டமாக அறிந்தவர் அண்ணாமலை. அவர் நேரடியாகவே, நாங்கள் என்ன தவெக மார்க்கெட்டிங் அதிகாரிகளா என்று கேள்வி எழுப்பி டென்ஷனாகினார். கரூர் விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளித்த போதும், விஜய் தனது வீடியோவில் எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடவில்லை. இதனால் எதிர்க்கட்சியினரும் விஜய்யை பற்றி அதிகமாக பேச வேண்டாம் என்றும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications