அக்கா குடும்பத்தையும் சேர்த்து காப்பாற்றிய புளியந்தோப்பு அலிமா.. நிர்கதியாய் நிற்கும் இரு குடும்பம்
சென்னை: சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த அலிமா இத்தனை ஆண்டுகளாக தனது அக்காள் குடும்பத்தையும் வீட்டு வேலை செய்து காப்பாற்றி வந்த நிலையில் தற்போது இரு குடும்பமும் ஆதரவின்றி நிர்கதியாய் நிற்கின்றன.
சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அலிமா(35). இவரது கணவர் ஷேக் அப்துல் மற்றும் ஒரு மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இவர் புளியந்தோப்பு நாராயணசாமி தெரு பகுதியில் உள்ள சாகிதா பேகம் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அலிமா வீட்டு வேலை செய்வதற்காக நாராயணசுவாமி தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார்.

பூமிக்கடியில்
அப்போது சாலையில் தண்ணீரும் சேறுமாக இருந்ததால் ஓரமாக நடந்து வந்தார். அப்போது பூமிக்கடியில் புதையுண்டு கிடந்த மின் கேபிள் வெளியே வந்து கிடந்தது. அந்த கம்பியை மிதித்த அலிமா அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டார். கடந்த 20 தினங்களாக இப்பகுதியில் பூமிக்கடியில் புதைத்த கேபிள் வெளியே தெரிவதாக மின்சார வாரியத்திடம் பல முறை அப்பகுதி மக்கள் புகாரளித்தும் எந்த பலனும் இல்லை.

கொந்தளிப்பு
அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று ஒரு உயிர் போனது என பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இரு மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். உயிரிழந்த அலிமா தனது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் தனது அக்கா குடும்பத்தை சேர்த்து காப்பாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டு வேலை
அலிமாவின் அக்காவுக்கு கால்கள் செயலிழந்துவிட்டதால் அவரால் நடக்க முடியாது. இதனால் அவருக்கும் அவரது மகளுக்கும் அலிமாவின் மகனுக்கும் சேர்த்து அலிமா உழைத்து வந்துள்ளார். உடல் முடியாவிட்டாலும் தினமும் வீட்டு வேலைக்கு சென்றுவிடுவாராம்.

உண்ண உணவு
உடல்நிலை முடியாவிட்டாலும் எதற்கு வேலைக்கு செல்கிறாய் என அவரது அக்காள் கேட்டால், வீட்டு வேலை செய்தால்தானே நாம் ஒரு வேளையாவது உண்ண முடியும் என்பாராம். அது போல் பார்த்து பார்த்து வேலை செய்து வந்த அலிமா இல்லாமல் இன்று இரு குடும்பமும் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் இருந்து வருகிறது. அவர்கள் இருக்கும் வீட்டுக்கும் பட்டா இல்லாததால் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications