இரண்டு வரியை வைத்துக்கொண்டு புகார்..குற்றச்சாட்டை மறுக்கிறேன்.. கூடுதல் அவகாசம் தேவை.. உதயநிதி பதில்
சென்னை: அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மரணம் குறித்த தனது முழு பேச்சையும் கேட்காமல் வெறும் இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு புகார் அளித்துள்ளதாகவும் கூடுதல் விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என்றும் உதயநிதி தேர்தல் ஆணையத்திற்குப் பதில் அளித்துள்ளார்.
Recommended Video

தமிழ்நாட்டில் நேற்று அமைதியான முறையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி போட்டியிட்டார். கடந்த மக்களவை தேர்தலைப் போலவே உதயநிதி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணங்கள் குறித்த அவரது பேச்சு சர்ச்சையானது.
தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பானது என்பதால் பாஜக அளித்த புகாரின் அடிப்படையில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதிக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு உதயநிதி அளித்துள்ள பதிலில், "கடந்த மார்ச் 31 தாராபுரத்தில் நான் பேசிய முழு பேச்சையும் கேட்காமல் வெறும் இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். தேர்தல் ஆணையம் இந்த பதிலை இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், இது குறித்துக் கூடுதல் விளக்கம் அளிக்க எனக்குக் கால அவகாசம் தேவை" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பாஜக அளித்த புகாரில், "கடந்த மாதம் 31ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய உதயநிதி, பிரதமர் மோடியின் அழுத்தம் காரணமாகவே முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்தனர் என்று பேசினார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications