குவிந்த மக்கள்.. கொட்டும் மழையில் நனைந்தபடி குறைகளை கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொரோனாவால் உயிரிழந்த கட்சி தொண்டரின் புகைப்படத்தை திறந்து வைத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
Recommended Video
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தொகுதிக்குள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த நிலையில்தான், அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

சூட்டிங் பிரேக்
இதையடுத்து, அவர் தீவிர அரசியலிலிருந்து சில நாட்கள் பிரேக் எடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தனது சூட்டிங் வேலைகளை ஒதுக்கி தள்ளி விட்டு கட்சி தொண்டர் உயிரிழந்த நிகழ்வுக்கு அவர் சென்றதும், கொட்டும் மழையில் அவர் கட்சியினரோடு அந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்ததும், திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கொரோனாவால் இறந்த கிளைச் செயலாளர்
பூவிருந்தவல்லி ஒன்றியம் பாரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன். திமுக கிளைச் செயலாளரான இவர் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிர் இழந்தார். இதையடுத்து நேற்று அவரது படத்திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றார்
இதில் திமுக இளைஞரணிச் செயலாளர் எம்.எல்.ஏ உதயநிதி பங்கேற்றார். அப்போது பெரிய அளவுக்கு மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தவில்லை உதயநிதி. நிகழ்ச்சியை ரத்து செய்யுங்கள் அல்லது நான் பிறகு ஒரு நாள் வருகிறேன் என்றும் சொல்லவில்லை.

கொட்டும் மழையில் உதயநிதி
கொட்டும் மழைக்கு இடையே, அந்த நிகழ்ச்சியில், உதயநிதி கலந்து கொண்டு புகைப்படத்தை திறந்து வைத்து பின்னர் மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோருக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
அதேபோல் கொட்டும் மழையிலும், அங்கே வந்திருந்த பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரிசன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications