திமுக பொதுக்குழு வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய முதல் உரை... என்ன பேசினார்...?
சென்னை: திமுக பொதுக்குழு வரலாற்றில் முதல்முறையாக அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று உரை நிகழ்த்தினார்.
பொதுக்குழுவில் பேசுவதற்கு தமக்கு வாய்ப்பு பெற்று தந்ததற்காக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகிய இருவரையும் வாழ்த்தும் வயது தமக்கு இல்லை என்றும் இளைஞரணிக்கு அவர்கள் இடும் கட்டளையை ஏற்று செயல்படத் தயார் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்டாலின் அறிவிப்பு
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரையும் வாழ்த்தி பேச முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் வாய்ப்பு தரப்பட்டது. அந்த வகையில் இளைஞரணிச் செயலாளர் என்பதால் உதயநிதியை வாழ்த்துரை வழங்குமாறு மு.க.ஸ்டாலின் அழைத்தார். அப்போது பேசிய அவர், அன்பு மாமா துரைமுருகன், அன்பு மாமா டி.ஆர்.பாலு என தனது உரையில் குறிப்பிட்டு அவர்கள் இருவரையும் உள்ளம் நெகிழச் செய்தார்.

கட்டளைக்கு கட்டுப்பட்டு
திமுக இளைஞரணியை பொதுச்செயலாளர் துரைமுருகன் மறந்துவிடக் கூடாது என்றும் பொதுச்செயலாளர் இடும் கட்டளையை ஏற்று செயல்பட திமுக இளைஞரணி எப்போதும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மூத்தவர்களான துரைமுருகனையும், பாலுவையும் வாழ்த்தும் அளவுக்கு தமக்கு வயதில்லை என அடக்கத்தை வெளிப்படுத்தினார். கோபாலபுரத்தில் நிகழ்ந்த பழைய நினைவுகள் பற்றி உதயநிதி பேசிய போது டி.ஆர்.பாலு மிக உன்னிப்பாக கவனித்து சிரித்த முகத்துடன் காணப்பட்டார்.

ராயல்டி தருக
ஜூம் செயலியை யார் கண்டுபிடித்தார்களோ அவர்கள் உண்மையிலேயே மு.க.ஸ்டாலினுக்கு தான் ராயல்டி தர வேண்டும் என்றும் அந்தளவிற்கு அந்த செயலி மூலம் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி ஆயிரக்கணக்கானவர்களுடன் பேசியுள்ளதாக தெரிவித்தார். திமுக பொதுக்குழு வரலாற்றில் முதல்முறையாக மைக் பிடித்ததால் தொடக்கத்தில் பதற்றத்துடன் பேசத் தொடங்கிய அவர், பேச்சின் இறுதியில் சிக்ஸர் அடித்துச் சென்றார்.

பொருள் என்ன?
''நாங்களும் இருக்கிறோம், இளைஞரணியை மறந்துவிட வேண்டாம்'' என துரைமுருகனை பார்த்து சிரித்தவாறே உதயநிதி ஸ்டாலின் பேசியதன் அர்த்தம், வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணியினருக்கும், இளைஞர்களுக்கும் போதிய வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பது தான். வேட்பாளர் தேர்வில் பொதுச்செயலாளர் என்ற முறையில் பிரதான இடத்தில் துரைமுருகன் அமருவார் என்பதை அறிந்து இப்போதே தமது அணியினருக்காக சூசக முறையில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications