நான் பெரிய படிப்பாளிலாம் இல்லை.. ஆனா ஒரு சப்ஜெக்ட்ல மட்டும் 90% வாங்கிருவேன் தெரியுமா?- உதயநிதி கலகல
சென்னை: தாம் பள்ளியில் படிக்கும்போது எல்லா பாடங்களிலும் சராசரி மாணவன் என்றும் ஆனால் தமிழில் மட்டும் எப்போதும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துவிடுவேன் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
மாணவர்கள் கல்வியோடு நிற்காமல் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஒரு அண்ணனாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் உரிமையுடன் பேசியிருக்கிறார்.
சென்னை இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது;

இலக்கிய திருவிழா
நம் மொழியின் இலக்கிய செழுமையை, அதன் மரபை கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் அறிவித்தார். நதி நாகரிக மரபு அடிப்படையில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நான்கு இலக்கிய திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

100 இலக்கிய ஆளுமைகள்
இதன் முதல் நிகழ்வாக 'பொருநை இலக்கிய திருவிழா' திருநெல்வேலியில் கடந்த நவம்பர் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து சென்னை இலக்கியத் திருவிழா 06.01.2023 முதல் 08.01.2023 வரை 3 நாட்கள் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அமர்வுகளில் பங்குபெறுகிறார்கள்.

எழுதியும், பேசியும்
திராவிட இயக்கமே எழுதியும், பேசியும் வளர்ந்த இயக்கம் தானே. நான் தீவிரமாக வாசிப்பவன் கிடையாது. ஆனால் சின்னச் சின்ன புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இலக்கியவாதிகளுடன் எனக்கு நல்ல பரிட்சயம் இருக்கிறது. அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். கழகத்தில் இளைஞர் அணி செயலாளராகவும், இளைஞர் நலன் சார்ந்த அமைச்சராகவும் இருப்பதால் நம் வரலாற்றை, கலையை, பண்பாட்டை அடுத்தத் தலைமுறையினரிடம் கடத்தவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

சராசரி மாணவன்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வைத்துக்கொண்டு இதைச் சொல்கிறேன். நான் பள்ளியில் படிக்கும்போது எல்லா பாடங்களிலும் சராசரி மாணவன் தான். ஆனால், தமிழில் எப்போதும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வகுப்பில் முதல் மாணவனாக வருவேன். அதற்கு காரணம் முத்தமிழறிஞர். சிறுவயதில் இருந்தே அவரின் எழுத்துக்களையும், முரசொலியையும் படித்து வளர்ந்ததால் இயல்பிலேயே தமிழார்வம் உண்டு.

அன்பகத்தில் நூலகம்
நாங்களும் எங்களுடைய இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கியுள்ளோம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த நூலகம் திறந்து இருக்கும். 4 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.

திறமைகளை வளர்த்துக் கொள்க
தனிப்பட்ட வாழ்விலும் கலை-இலக்கியம் உங்களின் தலைமை பண்புகளையும் வளர்க்கும், இப்போது நீங்கள் ஏறும் மேடைகள், எதிர்காலத்தில் நிறுவனத்தில் உயர் பதவிகளுக்கு செல்லும் போது உங்களுடைய தயக்கத்தை எல்லாம் குறைத்து, அந்த இடத்தை உங்களுக்கான இடமாக மாற்ற உதவும். அதை எதிர்காலத்தில் நீங்களே உணர்வீர்கள். ஆகவே மாணவர்கள், கல்வியோடு இதுபோன்ற திறமைகளையும் உடன் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் ஒரு அண்ணனாக உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications