"சனாதனம்".. உதயநிதி அப்படி சொன்னதும்.. "அவருக்கே" போனை போட்டுட்டாராமே ராகுல் காந்தி.. என்னாச்சு?
சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய நிலையில் திமுகவின் முக்கிய புள்ளி ஒருவருக்கு காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி போன் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். அவருடைய பேச்சு காரணமாக தேசிய அளவில் அவர் விவாதங்களில் ஈடுபட்டு உள்ளார். அவருடைய ஒரு பேச்சு தற்போது இந்திய அரசியலையே உலுக்கி உள்ளது. பல்வேறு கட்சிகளை உதயநிதியின் ஒற்றை பேச்சு உலக்கி போட்டு உள்ளது.

என்ன நடந்தது?: அவர் தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.
அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.
சனாதனம் பற்றிய பேச்சு: சனாதனம் குறித்த அவரின் பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் பலரும் அவரின் பேச்சால் அரண்டு போய் உள்ளனர். அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் வர தொடங்கி உள்ளன,
மொத்தத்தில் அவரின் பேச்சு தேசிய அளவில் விவாத பொருளாக மாறி இருக்கிறது. இதையடுத்து தனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொன்ன உதயநிதி ஸ்டாலின், நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.. பல ஆண்டுகளுக்கு முன்பு மேலாடை அணியக்கூடாது. கோவில்களுக்குச் செல்லக்கூடாது என்றார்கள். இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதை மாற்றியதுதான் திராவிடமாடல். என்ன வழக்குப் போட்டாலும் சந்திப்போம்.
ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன்.எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை எல்லாம் கொலை செய்வதாக அர்த்தமா? பிரதமர் மோடி, 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்கிறார். அப்படி என்றால் காங்கிரஸ்காரர்களை பிடித்து கொல்லப்போகிறார்களா?. பாஜக பொய்யான செய்திகளை பரப்புவதில் பிரபலமானவர்கள். அதைத்தான் செய்கிறார்கள், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
போன் செய்தார்: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய நிலையில் திமுகவின் முக்கிய புள்ளி ஒருவருக்கு காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி போன் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, திமுகவின் மூத்த புள்ளி ஒருவருக்கு போன் போட்ட ராகுல் காந்தி.. உதயநிதி பேசியதில் தவறில்லை. அது திமுகவின் கொள்கை. இதனால் பிரச்சனை இல்லை.
அவரின் கருத்துரிமை இது. ஆனால் இது தேசிய அளவில் இந்திய கூட்டணிக்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. தேசிய அளவில் இந்திய கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு கருத்து தெரிவிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி அந்த மூத்த தலைவரிடம் ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.
தேசிய அளவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு பிரஷர் ஏற்படுவதால் ராகுல் காந்தி இப்படி பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications