நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிப்பு.. ஏப்ரல் 9ல் அனைத்து கட்சி கூட்டம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 9ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு மறுத்திருந்ததாக கூறிய மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்கேற்ப தமிழக சட்டசபையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதன்பின் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்த நிலையில் தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு நிராகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசுகையில், மருத்துவத்துறையில் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்வதற்கு தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையே அடிப்படையாக இருந்தது.
2006ல் நடந்த மாற்றம்
2006ஆம் ஆண்டில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து, மாணவர் சேர்க்கையை மதிப்பெண் அடிப்படையில் கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். கிராமப்புறங்களில் வாழக் கூடிய ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கக் கூடிய இந்த முறையால் தான், மாநிலத்தின் அனைத்து பகுத்களிலும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு அமைந்தது.
வசதியான மாணவர்களுக்கு சாதகம்
ஆனால் நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின், இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற இயலாத கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கும் எட்டாக்கனியாக மாறிவிட்டது. நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு செல்லக் கூடிய வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதனால் மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
நீட் விலக்கு மசோதா
அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சட்டசபையில் 13.9.2021ல் தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2021 என்ற சட்ட முன்முடிவு நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், மீண்டும் சட்ட முன் முடிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதன்பின் மத்திய அமைச்சகங்கள் தரப்பில் கோரப்பட்ட விளக்கங்களும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு நிராகரிப்பு
ஆனால் இதனை ஏற்காமல் மாணவர்களுக்கு பேரிடியாக நீட் விலக்க சட்டத்தை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் மாண்பை அவமதித்துள்ள மத்திய அரசு எதேச்சதிகார போக்கு அரசமைப்பு சட்டம் தந்தித்துள்ள கூட்டாட்சி வரலாற்றில் கருப்பு அத்தியாயம். நமது கோரிக்கையை நிராகரித்திருந்தாலும், நமது போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தின் அடுத்த கட்ட முடிவுகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்.
அனைத்து கட்சி கூட்டம்
அதேபோல் இதுதொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களிடமும் ஒரு ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 9ஆம் தேதி மாலை தலைமை செயலகத்தில் நடக்கவுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். மருத்துவர் கனவோடு கல்வி பயிலும் மாணவர்கள், பெற்றோரின் சார்பாக தமிழக அரசு உறுதியோடு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications