இது பாஜகவின் அரசியல்.. இஸ்லாமியர்களுக்கு துணையாக தவெக இருப்போம்.. கொந்தளித்த புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: பாஜகவின் அரசியல் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராகவே இருப்பதாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விமர்சித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு எப்போதும் தவெக உறுதுணையாக இருக்கும் என்று கூறிய ஆனந்த், வக்ஃபு வாரிய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வக்ஃபு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ராஜ்ய சபாவில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகள் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து வக்ஃபு வாரிய திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு தமிழ்நாட்டில் பாஜக மற்றும் தமாகாவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று தவெக தரப்பிலும் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயக அவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா பற்றி விவாதிக்க போதுமான இஸ்லாமியர் உறுப்பினர்கள் இல்லை.
இதுதான் பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று சென்னை, கோவை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பனையூரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தவெகவைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் கோஷம் எழுப்பி போராடினர்.
இதனைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். எப்போதும் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கும். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் நேற்றே கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த சட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இஸ்லாமியர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் அச்சம் தவெகவிற்கு நன்றாக தெரியும். மற்றவர்களை போல் தவெகவும் வந்தோம், சென்றோம் என்று இருக்க போவதில்லை. வக்ஃபு மசோதா கொண்டு வரப்பட்டதன் மூலமாக பாதிக்கப்படுகிறார்கள். வக்ஃபு சொத்துகளில் ஏன் மத்திய அரசு தலையிட வேண்டும். பாஜக செய்வது அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications