நீட் விலக்கு மசோதா- விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம்!
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டசபை மசோதா மீது விளக்கம் கேட்டு மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்மசோதா மீது மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசும் பதில் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசானது, நீட் மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரம்என்ன? நீட் மசோதா மத்திய அரசின் அதிகார வரம்பில் வருகிறாதா? தேசிய மருத்துவ ஆணைய சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு இது முரண்பட்டு அமைந்துள்ளதா? தரமான கல்வி, வெளிப்படைத் தன்மை, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு உள்ளிட்ட வரலாற்று சீர் திருத்தங்கள் உறுதி செய்யும் வகையில் உள்ள நீட் தேர்வுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா? நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துமா? அரசியல் அமைப்பு சட்டப்படி இந்த சட்டம் செல்லத்தக்கதா? தேசிய கல்வி கொள்கைக்கு முரணாக அமைந்து உள்ளதா? ஆகிய கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் கேட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசும் பதில் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஓரிரு வாரங்களில் மத்திய அரசுக்கு மீண்டும் பதில் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.
தமிழ்நாடு சட்டசபையில், இளங்கலை மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு முறையை விலக்கக் கோரி மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் 2017ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் அம்மசோதா வலியுறுத்தியது. இம்மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒப்புதல் தரக் கோரி தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.
ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் ரவி, நீட் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக சமமற்ற தளத்தை உருவாக்குகின்றன; அது தேவையற்றது என்பது அரசின் கருத்து என தமது உரையில் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்திலும் தமிழ்நாடு அரசின் நீட் மசோதா குறித்து தமிழ்நாடு எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். பின்னர் பிப்ரவரி 8-ந் தேதி மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீதுதான் மத்திய அரசு மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நீட் விலக்கு மசோதா.. மத்திய அரசின் கேள்விகள் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!