மத்திய அரசின் நல் ஆளுமை விருது! நம்பர் 1 கிராமமாக பிச்சானூர்! ஊராட்சித் தலைவருக்கு ஸ்டாலின் பாராட்டு
சென்னை: மத்திய அரசின் நல் ஆளுமை விருதை பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், பிச்சானூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ஆம் நாள் தேசிய ஊராட்சிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக, உள்ளூர்மயமாக்கப்பட்ட நீடித்த, நிலைத்த வளர்ச்சி இலக்குகளை மையப்படுத்தி 9 கருப்பொருட்கள் இனங்காணப்பட்டு, அவற்றில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், 2022-23 ஆம் ஆண்டில் தேசிய அளவில் சிறப்பாக செயல்புரிந்த 27 கிராம ஊராட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழ்நாட்டிற்கு நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் கருப்பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், பிச்சானூர் ஊராட்சிக்கு குடியரசுத் தலைவரால் 17.04.2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நல் ஆளுமை விருது பெற்ற பிச்சானூர் ஊராட்சி மன்றத் தலைவர் மருதாசலத்தை முதல்வர் ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று சந்தித்து விருதை காட்டி வாழ்த்துப் பெற்றார். இதனிடையே இந்தச் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை.
பிச்சானூர் ஊராட்சியை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் வருகிறது. செந்தில்பாலாஜி தான் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்பதால் அவரும் இந்தச் சந்திப்பின் போது உடனிருப்பார் என எதிர்பார்த்ததற்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications