நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. மக்களே உஷார்.. உங்க கையில் அதிகபட்சம் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்?
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த அக். மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அப்போதே விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் இது காலதாமதமானது,

தேர்தல்
இந்தச் சூழலில் நேற்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரு கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடத்தை விதிகள்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டன. வாக்காளர்களுக்குப் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பணம் பறிமுதல் செய்யும் போது அவற்றை உடனடியாக வீடியோ எடுத்து அனுப்பி வைக்கப் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

45 பறக்கும் படைகள்
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் வகையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளைய தினம் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் நிலையில், கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிகபட்சம்
மாநகராட்சிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒருவரால் அதிகபட்சம் ரூ 50 ஆயிரம் வரை எடுத்துச் செல்ல முடியும். பணத்திற்கான உரிய ஆவணத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் சமர்ப்பித்தால், பணம் உடனடியாக திரும்ப அளிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனை
தலைநகர் சென்னையில் தேர்தல் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வது குறித்து சென்னை ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி இன்று தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதேபோல சென்னை மாநகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி இன்றும் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications