வைகோவிற்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதிமுக பொதுச்செயலாளராக வைகோ உள்ளார். இவருக்கு வயது 81. வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது வைகோவிற்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் இன்று மீண்டும் வைகோவிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து உடனடியாக வைகோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வைகோவின் உடல்நலனை டாக்டர்கள் குழு கவனித்து வருகிறது.
முன்னதாக இன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வைகோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தலைமையில் இன்று நடந்து வரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் வைகோ கலந்து கொள்ள தயாராகி வந்தார். ஆனால் அதற்கு முன்பாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த விழாவில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ள வைகோ உடனடியாக குணமாகி வீடு திரும்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications