7 பேர் விடுதலை தாமதமாக காரணமே ஆளுநர் ரவி தான்.. “மனசாட்சி இல்லாதவர்”.. ஆவேசமாக பேசிய வைகோ!
சென்னை : 30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி, மனிதாபிமானம் அற்றவர் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு பற்றி அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தீர்ப்பை வரவேற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை தாமதமானதற்கு ஆளுநரே காரணம் என விமர்சித்துள்ளார்.

6 பேர் விடுதலை கோரிய மனு
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகாலத்திற்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

பேரறிவாளனை தொடர்ந்து
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத்தான் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைவரையும் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு வரவேற்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு விமோசனம் பிறந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விமோசனம்
இந்தத் தீர்ப்பு தொடர்பாக வைகோ பேசுகையில், "எந்தத் தவறும் செய்யாமல் 30 ஆண்டுகள் இருண்ட சிறையில், தூக்குக் கயிற்றின் நிழலில் சித்திரவதைப்பட்டவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு விமோசனம் பிறந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் எந்த தொடர்பும் இல்லாதவர்களின் 30 ஆண்டு கால வாழ்க்கை மரண இருளிலே அழிந்தது. இந்த 30 ஆண்டு கால வாழ்க்கை திரும்ப வரப்போகிறதா? இழந்து போன காலம் திரும்ப வரப்போவதில்லை. எனினும் இப்போதாவது கிடைத்த இந்த விடுதலை பெரிய நிம்மதி.

மனசாட்சி இல்லாத ஆளுநர்
இந்தத் தீர்ப்பு ஆளுநருடைய அராஜக போக்கிற்கு கிடைத்த சரியான பதிலடி. அவர்களின் விடுதலை தாமதமானதற்கு காரணமே தமிழக ஆளுநர் தான். மனசாட்சியும், மனிதாபிமானமும் அற்றவர் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கிறார் என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications