வைரமுத்து டாக்டர் பட்டம் பெறும் நிகழ்ச்சி ரத்து.. இது சரியில்லை.. மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்
சென்னை: தனியார் பல்கலைக்கழகம், கவிஞர் வைரமுத்துவிற்கு இன்று கவுரவ டாக்டர் வழங்கவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள ஒரு தனியார், பல்கலைக்கழகத்தில், இன்று சிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக, அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
சர்ச்சைகள்
ஆழ்வார்களில் ஒருவரான, ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து, அதற்கு, தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அந்த விஷயத்தை, ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் நினைவுபடுத்தியதாகவும், எனவே இந்த நிகழ்ச்சியை தவிர்த்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, வைரமுத்து மீதான பாடகி சின்மயி சுமத்தியிருந்த பாலியல் குற்றச்சாட்டு விஷயமும், ராஜ்நாத்சிங்கின் சென்னை வருகை ரத்தாக காரணமாம்.
ரத்து
ராஜ்நாத் சிங் வருகை தராவிட்டாலும், குறிப்பிட்ட தேதியில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், வேறு சில சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இன்று அதுபோன்ற பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. ராஜ்நாத்சிங் வராமல், பட்டம் பெறுவதில் வைரமுத்துவிற்கே விருப்பம் இல்லை என்றும், எனவே, பல்கலைக்கழகம், இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில செயலாளர், கே.பாலகிருஷ்ணன் இன்று இதுதொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: சென்னை, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டம் வழங்குவதாக அழைப்பிதழும் வெளியிடப்பட்டிருந்தது.
டாக்டர் பட்டம் தடை
இந்நிலையில் தமிழக பாஜகவினரும், இந்துத்துவ அமைப்பினரும் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவுக்கு வராமல் ரத்து செய்துள்ளதும், இதனால் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தடைபட்டுள்ளதும் அறிய முடிகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
சுயாட்சி
கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது, விருது வழங்குவது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக கல்வி நிர்வாகங்களுக்கு உரிமையுண்டு. பல்வேறு துறைகளில் சாதித்துள்ள துறை வல்லுநர்களுக்கு அவர்கள் சாதித்துள்ள சாதனைகள் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுவதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் தலையிடுவது பொருத்தமானதல்ல. அத்தகைய நடைமுறைகள் அதிகரிக்குமானால் பல்கலைக்கழகங்களின் சுயாட்சித் தன்மை பாதிப்புக்குள்ளாகும்.
இலக்கிய சாதனை
இதுமட்டுமல்லாது கவிஞர் வைரமுத்து, தமிழ் இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளை ஆற்றியுள்ளார். திரைப்பட உலகில் பாடலாசிரியராக தனி முத்திரைப் பதித்தவர். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவெடுத்தது பொருத்தமானதே. தனிப்பட்ட நபர் என்பதை விட தமிழ்மொழிக்கு சேவை செய்திருக்கிற ஒரு கவிஞர் என்கிற வகையில் அவரது பங்களிப்பினை கௌரவப்படுத்துவது சரியானதே.
ஜனநாயக சக்திகள்
தொடர்ந்து தமிழ்மொழிக்கு எதிராகவும், தமிழ் பண்பாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிற இந்துத்துவ மதவெறி சக்திகளின் தொடர் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. பல்கலைக்கழக மற்றும் கல்வித்துறை செயல்பாடுகளில் மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளின் தலையீடு அபாயகரமானது என்பதையும், தமிழக ஜனநாயக சக்திகள் இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இப்பின்னணியில் சென்னை, பல்கலைக்கழகம் இந்துத்துவ அமைப்புகளின் நிர்ப்பந்தத்திற்கு இரையாகாமல் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிட வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.