அடையாளம் ஏராளம்.. ஆளெங்க? பேரெங்க? கும்பி எரியுதடி கொந்தளிக்கும் எம்மனசில்.. வைரமுத்து பாடல் வீடியோ
சென்னை: கவிஞர் வைரமுத்து இன்று அடையாளம் ஏராளம்.. ஆளெங்க? பேரெங்க? ஒரு பாடல் வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ குறித்து வைரமுத்து, "கல்யாணப் புடவையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தன் காதல் நினைவுகளைக் கடந்து போகிறாள் கல்யாணப் பெண் ஒருத்தி. காதலர்களின் பழைய காதல் அடையாளங்கள் வழியெல்லாம் வலம் வருகின்றன" என்று கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டத்தின் கீழ் 100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள் மூலம் வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடல்களை உருவாக்கி வருகிறார். அந்த வீயோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டும் வருகிறார்
அப்படி வெளியான பாடல்கள் தொடார்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன.

வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள பாடல் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதய்யா
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதய்யா
தோணுதய்யா பழையகதை
*
மின்னல் வெட்டும் ராத்திரியில்
சன்னல் பக்கம் நீஅழைக்க
அந்நேரம் பாத்து
அஞ்சாறு நாய் கொலைக்க
வெறிச்சோடிப் போயிருந்த
வீதியில நான்விழுந்து
தெறிச்சோடிப் போனதுக்குத்
தெருவிளக்கு அடையாளம்
சொட்டாங்கல்லு ஒண்ணு - எந்
தொடைப்பக்கம் தவறிவிழ
கல்லெடுக்கும் சாக்குல நீ
கள்ளத்தனம் பண்ண
ஆடி விழுந்ததுக்கும்
ஆளவிடு சாமியின்னு
ஓடி ஒளிஞ்சதுக்கும்
ஓடைக்கரை அடையாளம்
*
சீலகட்டத் தெரியாத
சிறுமியின்னு பாக்காம
வேளகெட்ட வேளையில
வெறிகொண்டு நீயணைக்க
மாமான்னு மிரண்டதுக்கும்
மணமாலை கேட்டதுக்கு
ஆமான்னு சொன்னதுக்கும்
அம்மன்கோயில் அடையாளம்
ஊருக்கே தெரியாம
யாருக்கோ பெண்டாகிக்
குதிரைவண்டி ஏறிக்
கொடிக்கால் கடக்கையில
மடிவிழுந்த கண்ணீரு
மழையாகிப் போனதுக்கு
இடிவிழுந்த ஆலமரம்
இன்னைக்கும் அடையாளம்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications