இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக் கவலை? வைரமுத்து செம ட்வீட்
சென்னை: தனக்காக குரல் கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்து உள்ளார்.
கவிஞர் வைரமுத்துவிற்கு சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் பல்கலைக் கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென விழா நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பாக தன்னால் வர முடியாது என்று அறிவித்துவிட்டார்.
ஏற்கனவே ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து கூறிய சர்ச்சை கருத்து மற்றும் பாடகி சின்மயி கூறி வரும் பாலியல் குற்றச் சாட்டு போன்றவற்றின் அடிப்படையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு ஒரு முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் வேறு ஒரு சிறப்பு விருந்தினரை வைத்து வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அந்த பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் பட்டமளிப்பு விழாவையே பல்கலைக்கழகம் ரத்து செய்துவிட்டது.
இதற்கு பல்வேறு கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி.
— வைரமுத்து (@vairamuthu) December 31, 2019
இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?
எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வைரமுத்து தனது ட்வீட்டில் எந்த பிரச்சனைக்காக இவர்கள் ஆதரவளித்தார்கள் என்பது பற்றி எதுவும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது.