கோரிக்கைகளை முன்வைத்த முதல்வருக்கு நன்றி.. நிறைவேற்றி தந்து பெருமைப்படுத்துங்கள் பிரதமரே.. வைரமுத்து
சென்னை: தமிழ்நாடு சார்பில் பிரதமருக்குக் கோரிக்கைகளை முன்வைத்தமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள கவிஞர் வைரமுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றி பிரதமர் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மு க ஸ்டாலின் முதல்முறையாக இன்று டெல்லி சென்றார். இன்று காலை டெல்லி சென்ற அவருக்குத் தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினர் அரசு மரியாதை அளித்தனர்.
இதையடுத்து மாலை 4.45 மணியளவில் தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்ட ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நீண்டது.
ஊரடங்கு: பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொடுத்தேன்- நீங்களும் எல்லோருக்கும் உதவுங்கள்- வைரமுத்து
பிரதமருடன் சந்திப்பு
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், உண்மைக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். மேலும் எந்தக் கோரிக்கை தொடர்பாகவும் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று பிரதமர் கூறியதாகக் குறிப்பிட்டார். வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கப் பிரதமர் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
ஸ்டாலின் பேட்டி
மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் பிரதமரிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், கூடுதல் தடுப்பூசிகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டம் & வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் உட்பட 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன் வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
|
வைரமுத்து ட்வீட்
பிரதமரிடம் முதல்வரின் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நீட் தேர்வு - கல்விக் கோரிக்கை, திருக்குறள் தேசியநூல் - கலாசாரக் கோரிக்கை, தடுப்பூசி - உயிர்க் கோரிக்கை, வேளாண் சட்டங்கள் - உழவர் கோரிக்கை, ஜி. எஸ். டி - பொருளாதாரக் கோரிக்கை, முன்வைத்தமைக்கு நன்றி முதலமைச்சர் அவர்களே! கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து பெருமைப் படுத்துங்கள் பிரதமர் அவர்களே!" என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துள்ள நிலையில், நாளை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.