ஓபிஎஸ் எழுதிய கடிதம் தெரியாதா? அப்ப இபிஎஸ் என்ன நிலையில் இருக்கிறார் தெரியுமா?.. ஓபிஎஸ் தரப்பு நறுக்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை தெரியாது என கூறுவதிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமைக் கழகத்துடன் தொடர்பின்றி இருக்கிறார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் விமர்சித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு பூதாகரமாகியுள்ளது. ஒற்றை தலைமை தேவை என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் விடாபிடியாக இருக்கிறார்கள்.
ஆனால் ஓபிஎஸ் தரப்போ நல்லாதானே போய்கிட்டிருக்கு, எதுக்கு ஒற்றைத் தலைமை, இரட்டை தலைமையே தொடரட்டும் என்கிறார்கள். இதுவே பன்னீர் செல்வத்தின் கருத்தாகவும் இருக்கிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது: சென்னை நீதிமன்றம்
ஒற்றைத் தலைமை
அதே வேளையில் ஒற்றைத் தலைமை என வந்தால் அது ஓபிஎஸ்தான் என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிடுகிறார்கள். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் தனித்தனியே 8ஆவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாளை மறுநாள் பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
அசாதாரண சூழல்
தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் தொண்டர்களின் நலன் கருதி பொதுக் குழு கூட்டத்தை வேறு தினத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் நேற்று முன் தினம் இரவு தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.
எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி கூறுகையில் ஓபிஎஸ் தரப்பினர் கொடுத்ததாக சொல்லப்படும் கடிதம் குறித்து தங்களுக்கு தெரியாது. பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என்றார்.
வைத்திலிங்கம் பதில்
இந்த நிலையில் இதுகுறித்து வைத்திலிங்கத்திடம் (ஓபிஎஸ் தரப்பு) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை தலைமை அலுவலகத்தில் இருக்கும் நிர்வாகி கையெழுத்திட்டு வாங்கியுள்ளார். கே பி முனுசாமி பேட்டி மூலம் அதிமுக தலைமைக் கழகத்துடன் இபிஎஸ் தொடர்பின்றி இருக்கிறார் என காட்டமாக விமர்சித்தார்.