மாநிலங்களவையில் கமல் பேச்சு எனக்கு புரியலை! இதுக்குத்தான் அவரை கோவை மக்கள் தோற்கடிச்சாங்க! வானதி
சென்னை: "மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசியது எனக்குப் புரியவில்லை. ஏற்கனவே அவரது பேச்சு புரியாததால்தான் மக்கள் அவரை கோவை தெற்கு தொகுதியில் தோற்கடித்தார்கள்" என பாஜக மகளிரணி தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
பாஜக சார்பில் கோவை கணபதி ஓம்சக்தி நகரில், மக்களின் கருத்துகளையும், பிரச்சனைகளையும் கண்டறியும் 'உங்கள் குரல் எங்கள் செயல்' என்ற புதிய அலைபேசி செயலி நேற்று தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழக பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள் அடங்கிய சங்கனூரில் 'மோடி முகாம்' நடைபெற்றது. பொதுமக்கள் பயன்பெறும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில், வானதி சீனிவாசனும் சுதாகர் ரெட்டியும் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு விநியோகித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "மக்களுக்கு எதிரான திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்களுக்கும் மக்களுக்குமான பெரும் கனவு. வரும் தேர்தலில் தமிழக மக்கள் இந்தக் கனவை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்" என்றார். தான் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்துக் கட்சித் தலைமையே முடிவு செய்யும் எனவும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக அரசு, முந்தைய அதிமுக அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனத் திட்டம், தாலிக்குத் தங்கம், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை நிறுத்திவிட்டதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். கமல்ஹாசன் மாநிலங்களவையில் பேசியது சமூக வலைதளங்களில் கேலிச்சித்திரமாகி வருவதையும் சுட்டிக்காட்டி, "அவர் பேசியது எனக்குப் புரியவே இல்லை. புரிந்தால் எனக்குக் கூறுங்கள்" என்று சவால் விடுத்தார்.
"கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, கமல்ஹாசனின் பேச்சு புரியாததால்தான் மக்கள் அவரைத் தோற்கடித்து அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் யாருக்காக நிறுத்தப்பட்டாரோ அந்த முதலாளிகள் அவரை இப்போது டெல்லிக்கு அனுப்பி இருக்கின்றனர். அவர்களுக்காவது அவர் நியாயம் செய்யக் கூடாதா?" என்றும் வானதி சீனிவாசன் காட்டமாக கேட்டார்.
பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, தந்தையின் உடல்நிலையை முன்னிட்டு, அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் சுற்றுப்பயணப் பட்டியலை மாற்றக் கோரிய விவகாரம் வேண்டுமென்றே பூதாகரமாக்கப்படுவதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டார். அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், "முதிர்ந்த அரசியல்வாதியான செங்கோட்டையன், காலத்தின் கொடுமையால் தற்போது கட்சி தொடங்கியுள்ள நடிகரோடு இணைந்து நிற்பது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது" என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.
தமிழக பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சியின் குறியீடு என்றும், திமுக கூட்டணி ஊழலின் குறியீடு என்றும் விமர்சித்தார். செந்தில்பாலாஜி, கனிமொழி, ஆ.ராசா போன்றோர் "ஜெயில் டூ பெயில்; பெயில் டூ ஜெயில்" என்ற நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி ஒரு சதவீதம் கூட ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறார் என்றார்.
உலகின் நான்காவது வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மோடி உயர்த்தி உள்ளதாக சுதாகர் ரெட்டி பெருமிதம் தெரிவித்தார். மோடி அரசு இளைஞர்கள், பெண்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது என அவர் குறிப்பிட்டார்.
திமுக ஒரு குடும்ப ஆட்சி என்றும், ஊழல் மலிந்த அரசு என்றும் சுதாகர் ரெட்டி சாடினார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இரட்டை இலையும், தாமரையும் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications