ஒரே பாட்டில் பஞ்சாயத்து ஓவர்.. அப்பாவை விட்டுத் தராத அன்புமணி! வன்னியர் சங்க மாநாடு ஏற்பாடுகள் ஜோர்!
சென்னை: வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அன்புமணி - ராமதாஸ் இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. ஒரே ஒரு பாடலை வெளியிட்டு தந்தைக்கு மரியாதை கொடுத்து இருக்கிறார் மகன். இதனால் ஏற்கனவே கட்சியில் உரலை ஏற்படுத்தியவர்கள் ஓரம் கட்டப்பட்டதாக கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளில் பாமக குறிப்பிடத்தக்கது. வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி தேர்தல் அரசியலில் பங்கேற்றவர் ராமதாஸ். அதிமுக திமுக என இரு கட்சிகளும் பாமக உடன் கூட்டணி அமைத்திருக்கின்றன.
வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமகவை கூட்டணிக்கு அழைத்து வரவேண்டும் என இரு கட்சிகளுமே விரும்பியது. கடந்த தேர்தலில் பாமக பாஜக கூட்டணி அமைந்தது. இதனால் அதிமுக பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.

ஒருவேளை பாஜக பாமக அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றிருக்கலாம் என்கின்றனர். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் தயாராகி வரும் நிலையில், பாமக வன்னியர் சங்க மாநாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரள வேண்டும் என்பது தலைமையின் உத்தரவு. அதற்கேற்றார் போல் கட்சியின் முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர் இதற்காக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது. கட்சியின் தலைவர் நான் தான் என அதிரடியாக அறிவித்தார் ராமதாஸ். அதே நேரத்தில் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் தான் தலைவர் என அன்புமணி கூறினார். அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே ஜிகே மணி விரிசலை ஏற்படுத்தியதாகவும், அவரை ஓரங்கட்ட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சரை ஜிகே மணி புகழ்ந்து பேசியது ராமதாஸின் காதுகளுக்கும் எட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வன்னியர் மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் முன்னிலைபடுத்தப்பட்டு இருப்பதாக சில குற்றம் சாட்டினர். காரணம் மாநாட்டு பாடல் முதலில் வெளியான நிலையில், அது அன்புமணி ராமதாஸை குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், வன்னியர் சங்க மாநாடு தொடர்பாக இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஐயா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற வரிகளோடு அந்த பாடல் இடம் பெற்றுள்ளது/ அதில் முழுக்க முழுக்க ராமதாஸின் போராட்ட வரலாறு. பெருமைகள். வன்னியர் இனத்துக்காக செய்த போராட்டங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. முதல் பாடலில் அன்புமணி ராமதாஸ் முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தாலும் இரண்டாவது பாடலில் ராமதாஸுக்கு அதிக முக்கியத்துவமும் அவர் செய்த சாதனைகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனால் தந்தை மீதான மரியாதையை அன்புமணி எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். மேலும் மாநாட்டுக்கு அதிக ஆட்களை திரட்டி வரவேண்டும், அதில் வன்னியர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. கட்சியில் யாராவது உள்குத்து அரசியல் செய்தால், கடும் நடவடிக்கை இருக்கும், தற்போதைக்கு மாநாட்டை நோக்கிய பணிகள் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என பாமக தலைமை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications