விஜய்யிடம் அண்ணாமலை சொன்ன வார்த்தை.. “பாஜகவின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கிடாதீங்க” - விசிக வார்னிங்!
சென்னை: பாஜகவின் சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்க வேண்டும் என்பதற்காகதான் அண்ணாமலை பாராட்டியுள்ளார். மாணவிக்கு நீதி கேட்டுச் சென்ற விஜய், மகுடிக்கு மயங்க மாட்டார் என நம்புவோம் என விசிக தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த 23ஆம் தேதி பல்கலை வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னையில் முக்கிய கல்வி நிறுவனமான அண்ணா பல்கலையிலேயே வெளிநபர் வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இந்த வழக்கை விசாரணை செய்யும் எனவும் உத்தரவிட்டது.
இதற்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "அண்ணனாகவும், அரணாகவும் எல்லா சூழ்நிலைகளிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக விஜய் டிச.30 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து இதுகுறித்து சில கோரிக்கைகளை வைத்தார். ஆளுநருடனான தனது 15 நிமிட சந்திப்பில் விஜய், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் புயல் மழை பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரண தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும்'' எனவும் வலியுறுத்தியுள்ளார்.
விஜய்யின் இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பி வருகிறது. இந்நிலையில், ஆளுநரை விஜய் சந்தித்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்தார். அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோடு, தவெகவும் களமிறங்கியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்நிலையில், விஜய் - ஆளுநர் ரவி சந்திப்பு குறித்து அண்ணாமலை வரவேற்பு தெரிவித்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, "தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்ததை வைத்து அவருக்கு வாழ்த்து சொல்லி அரசியல் செய்ய பாஜக தலைவர் அண்ணாமலை முயல்கிறார்.
ஏற்கனவே தனக்குத்தானே கொடுத்துக் கொண்ட சாட்டையடிக்கு வந்த விமர்சனங்களால் சுருண்டு போய் கிடந்த அண்ணாமலை அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு வருவதற்காக விஜய் ஆளுநரை சந்தித்ததை வலியச் சென்று வரவேற்கிறார்.
நடிகர் விஜய், திராவிட மாடல் என்று திமுகவை கடுமையாக விமர்சித்ததால் அவரால் திமுகவிடம் கோரிக்கை வைக்க முடியவில்லை. எனவே மாணவிக்கு நேர்ந்த துயரம் குறித்து ஆளுநரை சந்தித்து முறையிட்டிருக்கிறார். இது அவரது அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் ஆளுநர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பரப்பி வருபவர். அந்த சூழ்ச்சி வலைக்கு நடிகர் விஜய் சிக்கிவிடக்கூடாது.
பாஜகவின் சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணாமலை பாராட்டியுள்ளார். மாணவிக்கு நீதிகேட்டு சென்ற விஜய், மகுடிக்கு மயங்க மாட்டார் என நம்புவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications