"மாறுது கோலம்".. திமுகவை காலி செய்வோம்.. ஞாபகம் இருக்கா.. அர்ஜுன் சம்பத் இங்கே நடமாட முடியாது: விசிக
ரஜினிகாந்த்துக்கு அர்ஜுன் சம்பத் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் திராவிடம் மாயம் விலகி, தேசியம் மலர்ந்திட வேண்டும்... நேரடி அரசியலில் ரஜினி ஈடுபடாவிட்டாலும் திராவிட மாயையை அகற்றவும், மோடிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று அன்று ஆரூடம் சொன்னவர்களில் மிக மிக முக்கியமானவர் அர்ஜுன் சம்பத்.. ரஜினியே சும்மா இருந்தாலும், அடிக்கடி பேட்டிகளை தந்து அரசியலுக்கு அவரை வரும்படி அழைத்து கொண்டே இருந்தவர் அர்ஜுன் சம்பத்.
2 வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் சம்பத் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை அளித்தார்.. அப்போது ரஜினி அரசியல் குறித்து அவரிடம் கேட்டிருந்தோம்.. "ரஜினியின் ஆன்மீக அரசியல் எனக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டது.. அவருக்கு பக்கபலமா இந்து மக்கள் கட்சி துணை இருக்கும்... ஒரு மாற்றத்தை தமிழகத்தில் சேர்ந்து உண்டு பண்ணுவோம்" என்றார்..
மோடி + ரஜினிகாந்த் - திராவிடம்! வேற லெவல் பிளான்.. கொளுத்திவிட்டு அர்ஜுன் சம்பத் டமால் டுமீல் பேட்டி
ஆரூடம்
இதற்கு பிறகு, ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தபோது, மறுபடியும் அர்ஜுன் சம்பத்திடம் அதுகுறித்து கருத்து கேட்டிருந்தோம்.. அதற்கு அவர், "ரஜினியின் முடிவை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது... ரஜினி அரசியல் கட்சி துவங்குவதாக அறிவிப்பை வெளியிட்டது திமுகவை தோற்கடிக்கதான் என்று, ஸ்டாலின் வெளிப்படையாகவே பேசினார்.. ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரது வாக்குகள் பாஜகவுக்கு சென்றால் அதிமுக தோல்வியடையும் என்றும் நினைத்தார்கள்.
காலி திமுக
திராவிட அரசியலின் மோசமான நிலைமையை மக்கள் மனதில் ரஜினி பதிய வைத்துள்ளார்... ரஜினியின் கொள்கைகளை முன்னிறுத்தி திமுகவை நாங்கள் தோற்கடிப்போம்... 234 தொகுதிகளில் ரஜினியின் ஆசியோடு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திராவிட அரசியலுக்கு 2021 சட்டப்பேரவை தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்போம் என்றார் அர்ஜுன் சம்பத்.. அதாவது, ரஜினியே அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்ட நிலையில், அவரது கொள்கையை வைத்து, திமுகவையே காலி செய்வோம் என்று அர்ஜுன் சம்பத் அப்போது பேசியிருந்தது பெரும் பரபரப்பை தந்திருந்தது.
மனநோயாளி
இப்போது விஷயம் என்னவென்றால், மறுபடியும் ரஜினியை அரசியலுக்கு இழுத்து, ஒரு பேட்டி தந்துள்ளார் அர்ஜுன் சம்பத்.. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என்னை மனநோயாளி என்று சொல்கிறார்.. பதிலுக்கு பதில் நாங்கள் பேச தயாரில்லை.. அதற்கு பதிலாக, ஆன்மீக அரசியலை முன்னெடுத்து வருகிறோம். பிரிவினைவாதம், வன்முறை, மதமாற்ற சக்திகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்படுகிறது. அந்த கட்சியை தடை செய்ய வேண்டுமென ஆளுநர் மற்றும் முதல்வருக்கு மாவட்ட ஆட்சிகள் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆசை ஸ்டாலின்
ஆன்மீக அரசியல் கருத்துக்கள் தமிழகத்தில் மேன்மைபட வேண்டும்.. மேலும் தமிழகத்தில் திராவிடம் மாயம் விலகி, தேசியம் மலர்ந்திட வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் 2024 தேர்தலில் பிரதமரின் திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும்... நேரடி அரசியலில் அவர் ஈடுபடாவிட்டாலும் திராவிட மாயையை அகற்றவும் அவர் பிரச்சாரம் செய்ய வேண்டும். புதுச்சேரி மக்கள் தேசியத்தின் பக்கமுள்ளவர்கள். அதனால் திராவிட அரசியலை ஏற்க மாட்டார்கள். ஸ்டாலின் விருப்பமான புதுச்சேரியில் திமுக ஆட்சி என்ற ஆசை நிச்சயம் நிறைவேறாது" என்று அர்ஜூன் சம்பத் என்று கூறியுள்ளார்.
காவிச்சாயம்
முன்னதாக, இன்றைய தினம் விசிகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. ஆர்ப்பாட்டத்தில் பாஜக , ஆர்எஸ்எஸ், அர்ஜூன் சம்பத் ஆகியோருக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதில், விசிகவின் தேனி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "தமிழக தலைவர்களுக்கு தொடர்ந்து காவிச்சாயம் பூசும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே திமுகவை காலி செய்ய போவதாக கூறிய அர்ஜூன் சம்பத், வரப்போகும் எம்பி தேர்தலில், திராவிட மாயையை அகற்ற, ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.