தக்காளிக்கு வந்த வாழ்வு... ஒருகிலோ ரூ.140 - கத்தரி, வெண்டைக்காய் விலை பற்றி கேட்காதீங்க
தொடர்மழை வெள்ளம் காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகள் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.140 ருபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. அபரிமிதமாக கொட்டித்தீர்த்த மழையால் விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. காய்கறிகள் முற்றிலும் அழுகத் தொடங்கியுள்ளன. சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளதால் விலைவாசி உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்கள் வரை தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக தக்காளி கிலோ 140 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி, வெண்டை, கத்தரி உள்ளிட்டவைகளும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலைக்காய்கறிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.
கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது. இதனால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பயிர்கள் பயிரிடப்படுகிறது. விளையும் பயிர்களை பூலுவப்பட்டி, தொண்டாமுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
தொடர்மழை காய்கறிகள் விலை தாறுமாறு... தக்காளி விலை கிலோ ரூ.120 ஆக விற்பனை
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 14 கிலோ எடையுள்ள டிப்பர் தக்காளி நேற்று முன்தினம் 950 ரூபாய்க்கும், நேற்று 1,200 ரூபாய்க்கு விற்பனையானது. மழை குறைந்தாலும் தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். அதுவரை விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தக்காளி மட்டுமல்லாது வெண்டைக்காய், புடலங்காய், கத்தரி, பீட்ரூட் என பல காய்கறிகளும் 80 ரூபாய்க்கு மேல் விற்பனையாகின்றன. முன்பெல்லாம் சந்தைக்கு 500 ரூபாய் கொண்டு சென்றால் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்த நிலையில் தற்போது 2 நாட்களுக்குத் தேவையான காய்கறிகளை மட்டுமே வாங்க முடிவதாக இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது. தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.80க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ.120க்கும், ரூ.70க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.80 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு சந்தைகளில் காய்கறிகளின் வரத்து குறைவு காரணமாக சில்லறை விலையில் தக்காளி ஒரு கிலோ ரூ.140க்கு விற்பனையாகிறது. தக்காளி மட்டுமல்லாது கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் அதிகரித்துள்ளால் வீட்டு பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கவலைப்படுகின்றனர் இல்லத்தரசிகள்.
Recommended Video
காய்கறிகள், தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது.எனவே விலைவாசியை குறைக்க காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.