இப்பவே கண்ணைக் கட்டுதே! கரண்ட் அடிக்கும் கத்தரிக்காய்.. பீதி கிளப்பும் பீன்ஸ்! சிக்கனே வாங்கிறலாமே!
சென்னை: தொடர் கனமழையால் வரத்து குறைவு மற்றும் சபரிமலை சீசன் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ கத்தரிக்காய் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் 140 ரூபாய்க்கும், கேரட் 90 ரூபாய்க்கும் விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். அதிர்ச்சி அளிக்கும் வகையில் முருங்கைக்காய் 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக வெங்காயம் தக்காளி ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

குறிப்பாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் விரதம், முருகனுக்கு மாலை அணிவது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவது என விரத காலங்கள் அதிகமாக உள்ளது. இதனால் இறைச்சி நுகர்வு குறைந்து மக்கள் காய்கறிகளை அதிகளவில் பயன்படுத்துவார்கள்..
இறைச்சி விலை சரிவு:
இதனால் இந்த காலங்களில் இறைச்சி விலை வெகுவாக குறையும். அதே நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 260 முதல் 250 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் தற்போது 200 ரூபாயாக குறைந்து இருக்கிறது. ஆட்டு இறைச்சி விலை 800 ரூபாயாகவும், மீன்களின் விலை 200 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
காய்கறிகள் விலை உயர்வு:
ஏற்கனவே வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது வரத்து குறைவோடு பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் காலம் என்பதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பீன்ஸ், கத்தரிக்காய், கேரட், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
முருங்கைக் காய் விலை:
இன்றைய நிலவரப்படி காய்கறிகளில் அதிகபட்சமாக அதிர்ச்சி தரும் வகையில் முருங்கக்காய் 350 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஒரு கிலோ பீன்ஸ் 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் கத்தரிக்காயும் இதுவரை இல்லாத அளவு 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதற்கு அடுத்ததாக பீட்ரூட் 86 ரூபாய்க்கும், கேரட் 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காய்கறிகள் விலை:
பச்சை மிளகாய் 72 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 90 ரூபாய்க்கும் விற்பனையாகும் நிலையில் முட்டைக்கோஸ் 60 ரூபாய்க்கும், தக்காளி 38 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் ஒரு கிலோ பூண்டு 450 ரூபாய்க்கும், இஞ்சி 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இல்லத்தரசிகள் கவலை:
இதேபோல மற்ற காய்கறிகள் விலையை பொறுத்த வரை அவரைக்காய் 60 ரூபாய்க்கும், முள்ளங்கி 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ₹50 க்கும் விற்பனை ஆகிறது. வாழைக்காய் ஏழு ரூபாய்க்கு, எலுமிச்சை 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு பூ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேற்கண்ட விலைகள் அனைத்தும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கிலோ கணக்கில் காய்கறிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை ₹100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.












Click it and Unblock the Notifications