108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி பெண் டாக்டர்.. தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது போலீஸ்
Recommended Video
சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி சான்றிதழ்களை சமர்பித்து மருத்துவராக ஒருவர் பணிபுரிவதாக கிடைத்த புகாரின் பேரில் சென்னை தேனாம்பேட்டையில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர கால மருத்துவ உதவி சேவைகளை ஜிவிகே என்ற நிறுவனம் கையாண்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ளது.
16 மருத்துவர்கள்
இந்த நிறுவனத்தின் மனிதவள மேலாளர் அசோக்குமார் கடந்த 12-ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை போலீஸிடம் ஒரு புகாரை அளித்தார். அதில் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 16 மருத்துவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்தோம்.
பணிக்கு சேர்ந்த பெண்
அதில் வேலூரைச் சேர்ந்த ரேச்சல் ஜெனிபர் என்பவருடைய சான்றிதழ்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. அவர் மருத்துவமே பயிலாமல் போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச் ஆர் கேட்டுக் கொண்டார்.
தலைமறைவான ஜெனிபர்
தன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட ஜெனிபர் பணிக்கு செல்லாமல் தலைமறைவாகவே இருந்தார். இந்த நிலையில் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டில் ஜெனிபர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர்.
புழல் சிறையில் ஜெனிபர்
இதையடுத்து ஜெனிபர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.