இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்குக! வெவ்வேறு ஊதியம் என்பது அநீதி! -வேல்முருகன்
சென்னை: தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 31.5.2009-க்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அப்போது 11,170 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, ரூபாய் 8,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டது. இதனால், அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது.
இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் கைக்குழந்தைகளுடன், நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கடந்த 27ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான ஆசிரியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி. ஆனால் வெவ்வேறு ஊதியம் என்பது அநீதியானது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு எள்ளளவும் செவிசாய்க்கவில்லை.
இதன் காரணமாக, நம்முடைய கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றும் என்ற கனவோடும், நம்பிக்கையோடும், இடைநிலை ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
எனவே, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக முதல்வரே நேரடியாக தலையிட்டு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.