மோடி, அமித்ஷாவிடம் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கணும்! பேச்சிற்கு மயங்கிடக்கூடாது -வேல்முருகன்
சென்னை: பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியிருக்கிறார்.
மேலும், அவர்கள் இருவர் பேச்சிற்கும் தமிழர்கள் மயங்கிடக்கூடாது என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

இந்தி மொழி
நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார். அதாவது, இந்தி தான் நாட்டை ஒன்றிணைக்கும் என்பது அமித்ஷாவின் வாதம்.

தமிழ் மொழி
உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. எங்கள் உயிருடன், வாழ்வுடன் கலந்த மொழி தமிழ் மொழி, அந்த தமிழ் மொழி மற்றெதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும்வரை நான் அமைதி பெறமாட்டேன், திருப்தி அடைய மாட்டேன் என்று பேரறிஞர் அண்ணா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை தேவை
மோடி அவ்வப்போது தமிழ் மொழியின் பெருமிதம் பேசுவதும், திருக்குறள் பாடுவதும், நண்பர்கள் போன்று, தமிழர்கள் தோல் மீது கை வைத்து, மெதுவாக தமிழர்களை கழுத்தை இறுக்கி கொள்ளவே; மோடியும், அமித்ஷாவும் தமிழர்களுக்கு என்றுமே எதிரி தான்; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.

மயங்க வேண்டாம்
மோடியும், அமித்ஷாவும் தமிழ் மொழியின் புகழை பாடுவதெல்லாம், நம்மை ஏமாற்றவே; அவர்களின் பேச்சிற்கு நாம் மயங்கிடக்கூடாது.
எனவே, ஒன்றிய பாஜக அரசின் உள்நோக்கத்தை அமித்ஷாவின் கருத்தில் இருந்து புரிந்துக்கொண்டு, தமிழர்கள் எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications