சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு! பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை? -வேல்முருகன்
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு இன்னும் ஏன் குறைக்கவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வினவியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரி பொருளை வாங்கும் மோடி அரசு, நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிபொருளை தர மறுப்பது எந்த வகையில் நியாயம் என வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இன்று கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 92 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதிக விலைக்கு விற்கப்படுவது கண்டனத்துக்குரியது.

எரிபொருள் விலை
சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்பவே இந்தியாவில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுவதாக கூறி வரும் மோடி அரசு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதெல்லாம் உள்நாட்டில் அதைக் காரணம் காட்டி உயர்த்தியது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி அரசு முன்வரவில்லை.

என்ன நியாயம்?
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தவிர்க்கும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரி பொருளை வாங்கும் மோடி அரசு, நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிபொருளை தர மறுப்பது எந்த வகையில் நியாயம். எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு முன் வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்திருக்கிறார்.

தீவிர ஆலோசனை
இதனிடையே தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தும் திட்டத்தில் உள்ள வேல்முருகன், அது தொடர்பான ஆலோசனைகளையும் தனது கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications