ராமஜெயம் கொலை வழக்கு.. முக்கிய துப்பாக "வெர்ஷா வேன்".. கோவையில் சிபிசிஐடி கிடுக்குபிடி விசாரணை!
சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையில் வெர்ஷா வேன் முக்கிய தடயமாக கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ல் நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, சுவரொட்டிகள் ஒட்டி போலீசார் விசாரித்து வந்தனர். அதன்படி, கோவையிலும் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களிலும், காவல்நிலையங்களின் அறிவிப்புப் பலகையிலும் போலீசார் சுவரொட்டி ஒட்டி விசாரித்து வந்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் மாருதி சுசுகி வெர்ஷா கார் முக்கியமான தடயமாக கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வெர்ஷா கார் உரிமையாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 1,400 வெர்ஷா கார்கள் இருக்கும் நிலையில், கோவையில் மட்டும் 250 வெர்ஷா கார்கள் உள்ளன. பிசிஐடி டிஐஜி ஷகில் அக்தர் தலைமையில் சிறப்பு குழு தீவிர விசாரணை நடத்துகின்றனர். இதனால் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அடுத்தக்கட்டத்திற்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications