கருணாநிதி சிலையை திறக்கும் வெங்கையா நாயுடு...பாஜக போடும் அந்த ப்ளான் ஒர்க் அவுட் ஆகிறதோ?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்டத்தில் ஜூன் 3-ந் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவுடன் திடீரென பாஜக இணக்கமாக போவது என்பத அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காகத்தான் என கூறப்படுவதை உறுதி செய்கின்றன இத்தகவல்கள்.
கருணாநிதியின் பிறந்த நாள் இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஜூன் 3-ந் தேதி கருணாநிதியின் பிறந்த நாளில் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் 16 அடி உயர சிலை திறந்துவைக்கப்படுகிறது. தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலையை போலவே இதுவும் வடிவமைக்கப்படுகிறது. சிற்பி தீனதயாளனே இந்த சிலையையும் உருவாக்கி வருகிறார்.
கருணாநிதி நினைவிடத்தில் திடீர் ”கோவில்” ஒரு நிமிடம் திடுக்கிட்ட உடன்பிறப்புகள்.. ஆனால் மேட்டரே வேற!
கருணாநிதி சிலை திறப்பு
சென்னை அண்ணாசாலை கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார் என்கின்றன தகவல்கள். அண்மையில் டெல்லி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், வெங்கையா நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பும் விடுத்திருந்தார்.
திமுக- பாஜக
இது ஒருபுறம் இருந்தாலும் அண்மைக்காலமாக திமுகவுடன் பாஜகவும் மத்திய அரசும் இணக்கமான போக்கை காட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. நீண்டகாலம் கிடப்பில் போட்டு வைத்திருந்த தமிழக சட்டசபையின் நீட் மசோதா இப்போதுதான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள், நிதி உதவி வழங்கும் விவகாரத்தில் எந்த வித இழுத்தடிப்பும் இல்லாமல் மத்திய அரசு க்ரீன் சிக்னல் கொடுத்தது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நன்றியும் தெரிவித்திருந்தார்.
விரைவில் ஜனாதிபதி தேர்தல்
இதனைத் தொடர்ந்து திமுக நடத்தும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்க இருக்கிறார். விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையே பாஜக தமது வேட்பாளராக நிறுத்த வாய்ப்பிருப்பதாக டெல்லி தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
திமுக ஆதரவு?
வெங்கையா நாயுடுவை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக நிறுத்தும் போது திமுகவின் ஆதரவை எதிர்பார்க்கிறதாம் அக்கட்சி. நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியான திமுகவின் ஆதரவு இருந்தால் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை கூட நிறுத்தாது; போட்டியின்றி வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுவிடுவார் என்பது பாஜகவின் வியூகம். இதற்காகவே திமுகவுடன் இணக்கமான போக்கை தொடர்ந்து பாஜக முன்னெடுத்து வருகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.