3வது முறையாக.. கடலூரில் பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்.. ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததே காரணமாம்!
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் நாளை கடலூரில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடலூரில் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்றும், மஞ்சள் நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பு பிரச்சாரத்தை ரத்து செய்ததாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் காலை, மதியம், மாலை என்று 3 நேரங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக பிரச்சாரம் செல்ல, முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் தொகுதி வாரியாக பிரச்சாரத்தில் இருக்கிறார்.

கனிமொழி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடித்து மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகிவிட்டார். இன்னொரு பக்கம் திருமாவளவன், கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த், வைகோ, அண்ணாமலை என்று ஒவ்வொரு கட்சியினரும் பிரச்சாரத்தில் சுழன்று வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் 3வது முறையாக கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடலூரில் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கடலூர் மஞ்சள் நகர் மைதானத்தில் தவெக தரப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தவெக தரப்பில் ரோடு ஷோ நடத்தவும் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இப்படியான சூழலில் விஜய் கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார். ஏற்கனவே இன்று காலை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இந்த பிரச்சாரத்தையும் விஜய் ரத்து செய்திருந்தார். இதனால் விஜய்யின் மாற்று திட்டம் என்ன என்பதே தவெக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், பெரிய கட்சிகளே ஒரு நாளில் பல்வேறு மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் விஜய் சென்னை பிரச்சாரம் முடிவடைந்து 3 நாட்களாகியும், இன்னும் அடுத்த பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்கிறார். இது தவெக தொண்டர்களிடையே சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications