விவசாய கடன் முழு தள்ளுபடி! கேள்விக்குறியாகும் விஜய்யின் வாக்குறுதி? தெரியாத பக்கம்!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக விவசாயிகளின் நலனை மையமாகக் கொண்ட பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதில் மிக முக்கியமானது, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாகும்.
இந்த வாக்குறுதி தமிழ்நாட்டின் விவசாய சமூகத்துக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. இதனாலேயே விவசாய மக்களின் வாக்குகள் தவெக பக்கம் விழுந்தது, ஆனால் இந்த வாக்குறுதியை எப்படி விஜய் தலைமையிலான அரசு நிறைவேற்றும் என்பது தான் தற்போது பெரும் கேள்வியாக உள்ளது.

விவசாய கடன் முழு தள்ளுபடி
விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, 5 ஏக்கருக்கு குறைவான நிலம் கொண்ட விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். இந்தத் தள்ளுபடி ஆய்வு செய்த பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த பயிர் கடன் தள்ளுபடி என்பது சிறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார நிவாரணமாகும்.
விவசாயிகளுக்கான பிற திட்டங்கள்
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும், 2 ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகள் மற்றும் நிலமற்ற குடும்பங்களின் (அரசு ஊழியர் இல்லாத குடும்பங்கள்) குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகள் (மருத்துவம், பொறியியல் உள்ளிட்டவை) அரசால் முழுமையாக ஏற்கப்படும். இந்தத் திட்டங்கள் விவசாய குடும்பங்களின் எதிர்காலத்துக்கு பெரும் உதவியாக அமையும் என்று கூறப்படுகிறது.
ரூ.3 லட்சம் கோடி நிதிச் சுமை
5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய மட்டும் ரூ.3 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் விவசாயக் கடன் தொகை இந்தியாவிலேயே அதிகமாக ரூ.3.47 லட்சம் கோடி அளவில் நிலுவையில் உள்ளது. இதில் வணிக வங்கிகளிடமிருந்து மட்டும் ரூ.3.15 லட்சம் கோடி பாக்கி உள்ளது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூ.9.55 லட்சம் கோடி கடனில் இருப்பதுடன், TANGEDCO நஷ்டம் ரூ.1.62 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிலையில் ரூ.3 லட்சம் கோடி கூடுதல் நிதியை எப்படி ஒதுக்கப் போகிறார் என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.
தவெக பிரச்சாரம்
விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் "திமுக சொன்னதை செய்ததா?" என்று கேள்வி எழுப்பி தான் பெரிய அளவிலான பிரச்சாரத்தை முன்னெடுத்தார், இதனால் தான் மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று பலமுறை சத்தியம் செய்தார். இந்த வாக்குறுதிகளை நம்பித்தான் தவெக தொண்டர்களும் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டனர்.
இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் "மக்களை ஆசை காட்டி ஏமாற்றினார்" என்று பேச்சு எழலாம். எனவே, இந்த வாக்குறுதிகளை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பதே அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
விஜய்யின் இந்த வாக்குறுதிகள் விவசாய சமூகத்துக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டால், இவற்றை நிறைவேற்றுவது எளிதான காரியம் அல்ல. மக்கள் நலனுக்கான இந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படும் என்பதை அடுத்த சில மாதங்களில் தெளிவாகும்.












Click it and Unblock the Notifications