விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள்.. குருபூஜையாக அனுசரிக்கும் தேமுதிக.. எந்த கட்சிகள் பங்கேற்பு?
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை எந்த கூட்டணி என்பதை உறுதி செய்யவில்லை.

இதனிடையே அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியது. இதனை அறிந்த பிரேமலதா விஜயகாந்த், இந்த தகவலை வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டதாக சாபம் கொடுத்தார். இது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு பூத் கமிட்டிகள் இருக்கிறது என்ற தகவல் வெளியாகியது. அதன்படி திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு பின் அதிக பூத் கமிட்டி தேமுதிகவுக்கு இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியை விடவும் அதிகளவில் தேமுதிக பூத் கமிட்டி கட்டமைப்பை வைத்திருக்கிறது.
இந்த நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை தேமுதிகவினர் குருபூஜையாக அனுசரிக்கின்றனர். இந்த குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நேரடியாக சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.
தேமுதிக பொருளாளர் சுதீஷ் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். இதனால் விஜயகாந்தின் குருபூஜையில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் விஜயகாந்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு வரும் மக்களுக்கு சாப்பாடு அளிக்கவும் தேமுதிக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications