நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழக கொடியேற்றுகிறார் விஜய்.. கொடி எப்படி இருக்கும்? நடுவில் இந்த படமா?
சென்னை: விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வு நாளை மறுநாள் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 தவெக நிர்வாகிகள் முன்னிலையில், விஜய் கட்சிக் கொடியை ஏற்றி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடியில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்தும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். தாம் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டுள்ள இரண்டு படங்களை நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணிகள், உள்கட்சி கட்டமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் செயலி மூலமாக புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகளும் நடைபெற்று வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது 'GOAT' திரைப்படத்தில் நடித்துள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் திரளை ஏற்படுத்தும் மாநாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெகவின் முதல் மாநாட்டை அடுத்த மாதம் இறுதியில் நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நாளை மறுநாள் அதாவது, ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்ற உள்ளதாக தெரிகிறது. மாதிரி கொடி ஏற்றும் ஒத்திகை நிகழ்ச்சி அண்மையில் பனையூரில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
பனையூர் அருகே உள்ள ஆதித்யராம் சிட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டத்தில் நடிகர் விஜய் பேச உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கடிதம் தரப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், நடிகர் விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி மறுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் 300 பேர் வரை அமரக்கூடிய பகுதியாக உள்ளதால், அங்கேயே அனைத்து நிகழ்வுகளை நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதி அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழக கொடியில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும், நடிகர் விஜய்யின் பெயரை குறிக்கும் வகையிலும், வெற்றி என்பதைக் குறிக்கும் வகையிலும் 'வாகை' மலர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம் பெற்று இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சங்க காலத்தில் போரில் வெற்றி பெற்ற வீரர்கள், அரசர்கள் வாகை பூ சூடுவாடுகள். அந்தவகையில், வெற்றியை கட்டியம் கூறும் வகையில் தவெக கொடியில் வாகைப்பூ இடம்பெற உள்ளதாம். கட்சிக்கொடி அறிமுகம், முதல் மாநாடு என பணிகள் தீவிரமடைந்துள்ளதால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications