பச்சை பொய்.. மாஸ்க் போடாத முதல்வரா? பஸ் ஆய்வு செட்டப்பா? வைரலாகும் ஸ்டாலினின் போட்டோ.. உண்மையா?
முதல்வர் ஸ்டாலினின் ஆய்வு குறித்த தவறான போட்டோ இணையத்தில் பரவி வருகிறது
சென்னை: முதல்வர் முக ஸ்டாலின் பேருந்து ஆய்வை, பழைய புகைப்படத்துடன் வெளியிட்டு தவறான தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டோவுக்கு திமுக தொண்டர்கள் மறுப்பு தெரிவித்து வருவதுடன், கண்டனங்களையும் வலுவாக பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன... அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் 2 நாளைக்கு முன்பும் நடந்தது..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகர், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தடுப்பூசி முகாமை முதல்வர் முக ஸ்டாலின் அப்போது ஆய்வு செய்து பொதுமக்களிடம் பேசினார்.
ஒரே அறிவிப்பில் ஸ்கோர் செய்த முதல்வர் ஸ்டாலின்.. தீபாவளி போனஸ் அறிவிப்பு.. வந்தது உத்தரவு
திடீர் ஆய்வு
தொடர்ந்து, அங்கிருந்து தலைமை செயலகம் புறப்படும் முன்பு, கண்ணகி நகர் செல்லும் பஸ்ஸில் ஏறி, முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வையும் மேற்கொண்டார்... அப்போது பஸ்ஸில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா? போதுமான வசதி உள்ளதா? கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா? பெண் பயணிகளிடம் பஸ்ஸில் பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா? என்று மக்களின் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
செல்பி
தொடர்ந்து, அந்த பஸ்ஸில் இருந்த பயணிகளுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்... இப்படி முதல்வர் ஸ்டாலின் திடீரென பஸ்ஸில் ஏறி ஆய்வு செய்தது அதிகாரிகள் மட்டுமல்லாது, அப்பகுதி மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது... இந்த செய்தி மீடியாக்களிலும் பிரதான இடத்தை பிடித்தன.. இந்நிலையில், திடீரென முதல்வரின் பேருந்து ஆய்வை, பழைய புகைப்படத்துடன் வெளியிட்டு தவறான தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
ஸ்டாலின்
பஸ்ஸில் ஏறி முதல்வர் ஆய்வு செய்ததாக சொல்லப்படும் அந்த போட்டோவானது, கடந்த வருடம் அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டது.. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருந்த நிலையில், அந்த 2 தொகுதிகளிலும் திமுக தலைவரான ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.. வழக்கம்போல, திண்ணையில் அமர்ந்தும், நடைபயணமாக சென்றும் வாக்கு சேகரித்தார்.. அன்றைய தினம்தான், ஏழு செம்பொன் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்ஸில் ஏறிய ஸ்டாலின், பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.
கெட்-அப்
அந்த போட்டோவைதான் இப்போது சிலர் ஷேர் செய்து வருகிறார்கள்.. அந்த போட்டோவை பார்த்தால், முதல்வர் ஸ்டாலினின் கெட்-அப் முழுசுமாக மாறி இருப்பது நன்றாக தெரியவரும்.. அதேபோல ஆய்வு செய்யப்படும் அந்த பஸ் அலங்காரம் செய்யப்பட்டு கலர் பேப்பர்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.. அநேகமாக அந்த சமயம் ஆயுதபூஜை என்பதால் பஸ்ஸுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.. முக்கியமாக, முதல்வர் முதல் டிரைவர், பயணிகள் வரை யாருமே மாஸ்க் போடவில்லை..
கண்டனம்
எனவே, இது பழைய படம் என்பது தெளிவாக தெரிந்தாலும், சில விஷமிகள் தேவையில்லாமல் இப்படி காரியத்தை சோஷியல் மீடியாவில் பரப்பி கொண்டிருக்கிறார்கள். இதற்குதான் திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. "பொய்யை தவிர வேற எதுவுமே தெரியாதா?" என்றும் கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.