விநாயகர் சதுர்த்தி: நீர் நிலைகளை பாதிக்காதவாறு கொண்டாட்டம்..சென்னையில் 20000 போலீசார் பாதுகாப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து இடங்களிலும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒருமுறை பயன்படுத்தும், தெர்மாகோலால் ஆன பொருட்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்த கூடாது என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் காசிமேடு, பட்டினப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் நீர்நிலைகளில் கரைப்பதற்காக பல்வேறு மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்நிலையில் நீர்நிலைகளை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை நடத்துமாற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், விநாயகர் சதுர்த்தியின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு.
உலக வெப்பமயமாதல் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தல்களை ஏற்று நீர்நிலைகளை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.