இதுதான் லிமிட்.. "டிப்ரஷன்".. விராட் கோலியையும் விட்டுவைக்காத மன அழுத்தம்.. பரிதாபம்! நடந்தது என்ன?
சென்னை: தான் மிகவும் மோசமான மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதை வெளிப்படுத்த முடியாமல் மறைத்து வந்ததாகவும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கடந்த 10-15 வருடங்களாக இந்திய சமூகத்தில் மக்கள் இடையே அதிகமாக உலவ கூடிய வார்த்தை என்றால் அது டிப்ரஷன் என்ற வார்த்தையாகவே இருக்கும்.. அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையும் இதுதான்.. அதிகம் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தையும் இதுவாகவே இருக்கும்!
முக்கியமாக 90ஸ் கிட்ஸ்கள், 2கே கிட்ஸ்கள் இடையே அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தையும் டிப்ரஷன் என்பதாகவே இருக்கிறது.
எதுக்குமா அப்பாவோட கழுத்தை அறுக்க போன.. எல்லாரும் எங்கப்பாவை சங்கரு சங்கருனு சொன்னாங்க #aditijokes
டிப்ரஷன் என்றால் என்ன?
டிப்ரஷன் என்பதை எளிதாக தமிழில் மன அழுத்தம் என்று சொல்லி விடலாம். ஆனால் டிப்ரஷன் என்றால் என்ன என்பதை அவ்வளவு எளிதாக வரையறுக்க முடியாது, பிரபல https://psychiatry.org/ பக்கம் இதற்கு அளிக்கும் விளக்கத்தில்.. டிப்ரஷன் என்று ஒருவரின் உணர்வுகளில் ஏற்படும் திடீர் மாற்றங்கள். அதீத சோகமாக உணர்வது, அடிக்கடி மூட் மாறுவது, உணர்வுகள் பாதிப்பு அடைவது.. இது போன்ற பாதிப்புகள் சில நிமிடங்கள் இல்லாமல் நீண்ட நேரம், நீண்ட நாட்கள் தொடர்வது.
அர்த்தம்
அதாவது கடினமான மனநிலையில் வாழ்வது, வாழ்க்கையில் எது மீதும் பிடித்தம் இல்லாதது, சரியாக சிரிக்க கூட முடியாது, தற்கொலை எண்ணங்கள் வரும் எல்லாம் டிப்ரஷன் கீழே அடங்கும். டிப்ரஷன் பொதுவாக மனதை மட்டும் பாதிக்காமல் உடலையும் பாதிக்கும். வயிற்று பிரச்சனை தொடங்கி பாலியல் தொடர்பாக பிரச்சனை வரை டிப்ரஷன் காரணமாக ஏற்படலாம். அதோடு டிப்ரஷனில் பல வகைகள் உள்ளன. இதன் காரணமாக ஏற்படும் கிளை பாதிப்புகள், நோய்களும், குறைபாடுகளும் பல உள்ளன.
டிப்ரஷன்
இந்த நிகழ்கால சமுதாயத்தில் பலர் டிப்ரஷன் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் தங்களுக்கு டிப்ரஷன் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். சிலர் தங்களுக்கு இல்லாத டிப்ரஷனை இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்குத்தான் டிப்ரஷன் இருக்கிறது.. இவர்களுக்கு இல்லை என்று judgemental ஆக நாம் முடிவு எதுவும் எடுக்க முடியாது. இந்த டிப்ரஷன் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏழைகளுக்கு மட்டுமே டிப்ரஷன் இருக்கும்.. கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே டிப்ரஷன் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
கொரோனா
முக்கியமாக கொரோனா காலத்தில் டிப்ரஷன் பலரை பாதிக்க தொடங்கி உள்ளது. கொரோனா காலத்தில் டிப்ரஷன் காரணமாக தான் அதிகம் கஷ்டப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் குறிப்பிட்டு இருந்தார். இந்த மன அழுத்தம் காரணமாக மேக்ஸ்வெல் சில நாட்கள் கிரிக்கெட் இருந்து கூட ஓய்வில் இருந்தார். ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி ஓசாகா தான் நம்பர் 1 வீராங்கனையாக இருந்த போதும் டிப்ரஷன் காரணமாக பாதிக்கப்பட்டதாக கூறினார். இதேபோல் இன்னும் சில விளையாட்டு வீரர்கள் தாங்கள் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
கோலி
கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக செஞ்சுரி அடிக்க முடியாமல் கிரிக்கெட்டில் திணறி வருகிறார் கோலி. அவ்வப்போது இவர் அதிரடியாக 50, 70 என்று ரன்கள் அடித்தாலும் செஞ்சுரி அடிக்க முடியாமல் திணறி வருகிறார். முக்கியமாக கொரோனாவிற்கு பின்பாக இவரின் பார்ம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி முதல்முறையாக கோலியே வெளிப்படையாக் பேசி உள்ளார். கொரோனா காலத்தில் நான் 1 மாதமாக பேட்டை தொடவே இல்லை. நான் சமீபத்தில்தான் உணர்ந்து கொண்டேன்.. நான் என் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல் பொய்யாக நடிக்கிறேன் என்று. நான் ஆக்ரோஷமாக இருக்கிறேன் என்று எனக்கு உள்ளேயே சொல்லிக்கொண்டேன். ஆனால் உன் உடல் என்னை நிறுத்த சொன்னது.
ஆக்ரோஷம்
பொய்யாக நடிக்க வேண்டாம். கொஞ்சம் ஓய்வு எடு என்று என் மனமும் என்னிடம் சொன்னது. ரவி சாஸ்திரி கூட என்னை கொஞ்சம் ஓய்வு எடுக்கும் படி கூறினார். நான் ஒரு வலிமையான மனது கொண்ட நபராக பார்க்கப்பட்டேன். நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால் எல்லோரும் ஒரு லிமிட் இருக்கும். எனக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. அந்த லிமிட்டை நாம் கண்டுபிடிக்கவில்லை என்றால் அதுவே நமக்கு சிக்கலாக மாறிவிடும்.
ஆரோக்கியம்
அதுவே நம் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த காலம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு வேலையை விட இன்னும் பல விஷயங்கள் உள்ளன. உங்களை சுற்றி இருக்கும் எல்லோரும் உங்களை உங்களின் வேலையை வைத்து மட்டுமே அடையாளம் காணும் போது.. நீங்கள் உங்களுக்குள் இருக்கும் மனித தன்மையை இழக்க நேரிடும். கடந்த சில நாட்களாக நான் என்னுடைய உள் உணர்வுகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை.
பயிற்சி
நான் பயிற்சி செய்யவோ, உடற் பயிற்சி மேற்கொள்ளவோ ஆர்வமின்றி இருந்தேன். ஆனால் அது நான் கிடையாது. இந்த உணர்வில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தேன். இது போன்ற சூழ்நிலையில் இருக்கும் போது உங்களால் எதுவும் செய்ய முடியாது. உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாது. அதில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதே உங்களுக்கு தெரியும். உங்களுக்கு பிரச்சனை இருந்தால் அதை மறைக்க கூடாது.
பிரச்சனை
பிரச்னையை வெளிப்படுத்துவது, உணர்வது என்பது அதை மறைப்பதை விட சிறப்பானது என்று விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.தன்னை எல்லோரும் தன்னுடைய வேலையை வைத்து மட்டுமே அடையாளம் கண்டதாக.. மனிதனாக பார்க்க தவறியதாக விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். அதோடு தனக்கு பயிற்சி எடுக்க கூட போதிய விருப்பம் இல்லாத அளவிற்கு மன அழுத்தத்தோடு இருந்ததாக விராட் கோலி வெளிப்படையாக் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்
உலகில் நம்பர் 1 கிரிக்கெட் வீரர்.. சச்சினுக்கு அடுத்து இந்தியாவின் டாப் வீரர்.. பலருக்கு ரோல் மாடல்.. கோடிக்கணக்கில் வருமானம்.. திறமையான, அழகான மனைவி.. என்று விராட் கோலிக்கு இல்லாத வளங்கள் இல்லை. ஆனால் இத்தனை இருந்தும் அவருக்கும் மன அழுத்தம் இருக்கிறது. அதுவே மனித இயல்பு. யாருக்கு மன அழுத்தம் வரும்.. யாருக்கு வராது என்றெல்லாம் நாம் சொல்லவே முடியாது. ஆனால் அப்படிப்பட்ட மன அழுத்தம் தாக்கும் போது.. அதை உணர்ந்து கொள்வதும்.. ஒப்புக்கொள்வதும்.. முறையாக சிகிச்சை மேற்கொள்வதுமே அதற்கு தீர்வாக அமையும்!