அடுத்த ஆட்சி யாருக்கு.. நாளை தேர்தல் ரிசல்ட்.. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்!
நாளை காலை 8 முதல் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
சென்னை: நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன. இதனால் நாடு முழுவதும் உள்ள வாக்கு மையங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக எம்பி மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் கடந்த 18-ந் தேதி நடந்து முடிந்தது.
இதேபோல, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும், எம்பி தேர்தலின் போது பிரச்சனை ஏற்பட்ட பிற 13 வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவும் ஒன்றாக சேர்த்து கடந்த 19-ந் தேதி நடத்தப்பட்டது. நடந்து முடிந்த வாக்கு பதிவுகளில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
நாளை தேர்தல் முடிவு.. சென்னையில் கட்சி அலுவலகங்கள் தலைவர்களின் வீடுகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு !
விவிபாட் மிஷின்கள்
அனைத்து கட்ட தேர்தலும் நடந்து முடிந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபாட் மிஷின்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தபால் ஓட்டுகள்
இதையடுத்து நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதில் வழக்கம்போல் முதலில் தபால் ஓட்டுகள்தான் எண்ணப்படும். இந்த வாக்குகளை எண்ணுவதற்காகவே ஒவ்வொரு எம்பி தொகுதியிலும் 2 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தபாலில் வந்துள்ள சர்வீஸ் ஓட்டுகள் அனுப்பப்பட்ட படிவங்கள் உண்மையானதுதானா என ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள்
காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகும். வாக்கு எண்ணும் மையங்களில் தலா 204 ஊழியர்கள், 102 நுண் பார்வையாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அந்தந்த தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலேயே ஓட்டு எண்ணப்பட உள்ளது.
ஒப்புகை சீட்டுகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலுள்ள வாக்கு எண்ணும் பணி சுழற்சி முறையில் நடைபெறும். மின்னணு வாக்கு எந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை பணி முடிவுற்ற பின்னர் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கும் 45 நிமிடங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. எப்படியும் 19 சுற்றுகள் முதல் 24 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணும் பணி நடக்க வாய்ப்புள்ளது.
செல்போன்
ஒவ்வொரு வாக்கு எண் அறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் இவை கண்காணிக்கப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், மேஜை வாரியாக அங்குள்ள ஸ்பீக்கரில் அறிவிக்கப்படும். பிறகு சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்கள் நோட்டீஸ் போர்ட்டில் எழுதி வைக்கப்படும். வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. வேண்டுமானால், பென்சில், பேப்பர் மட்டுமே கொண்டு செல்லலாம். அதேபோல, அடையாள அட்டை இல்லாமல் செல்ல முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முதல் சுற்று முடிவுகள் சுமார் 10 மணி அளவில் தெரியவரும் என்றும், பிற்பகல் முன்னணியில் இருக்கும் வேட்பாளர்களின் நிலவரம் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியும், வெற்றி நிலவரம் தெரிய மாலை ஆகிவிடும் என்றும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இரவு ஆகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை வாக்கு எண்ணிக்கை என்பதால் சாவடிகள் அனைத்தும் பரபரப்பாக உள்ளது.